Also Watch
Read this
"சென்னை குரோம்பேட்டையிலிருந்து நேபாளத்திற்கு யாத்திரை சென்ற 49 பேரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை" என கண்ணீர் வடித்துள்ள உறவினர்கள், அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்ற ஒற்றை வார்த்தை கிடைத்தால்கூட நிம்மதியாக இருப்போம் என தெரிவித்துள்ளனர். அவர்கள் கடைசியாக தங்கள் உறவுகளிடம் என்ன பேசினார்கள்? அவர்களின் மனநிலை தற்போது எப்படி உள்ளது?

தற்போது வரை தெரியவில்லை
”ஆத்தா உன் அடியாரை அன்பால் ஆர்த்தாய்” என்ற கேப்ஷனுடன் வீடியோ, போட்டோக்களை உறவினர்களுக்கு அனுப்பியும், சமூகவலைதளத்தில் பதிவிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர்களின் நிலை என்ன? என்பது தற்போதுவரை தெரியவில்லை என்பதுதான் சோகமே.

கட்டிடமே அடித்துச் செல்லப்பட்டது
நேபாள இயற்கை பேரிடரில், தமிழர்கள் மொத்தம் 85 பேர் சிக்கி உள்ளதாக கூறப்படும் நிலையில், இதில் சென்னையை அடுத்த குரோம்பேட்டை ராதா நகர் ரங்கநாதன் தெருவில் செயல்பட்டு வரும் மகாதேவ் கைலாஷ் யாத்ரா நிறுவனம் மூலம் கடந்த 14ஆம் தேதி 49 பேர் சென்றுள்ளனர். அவர்கள் யாத்திரையை முடித்துவிட்டு நேபாளம்–சீனா எல்லைப் பகுதியில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் இமிகிரேஷன் நடைமுறைகளை மேற்கொண்டிருந்த போதுதான் வெள்ளம் வேட்டையாடி அந்த கட்டிடமே அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

நம்பிக்கையில் கண்ணீருடன்...
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை கணேசன் நகர் பகுதியில் உள்ள அல்சா மேப்பர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த தம்பதியை தொடர்பு கொள்ள முடியவில்லை என பக்கத்துவீட்டு பெண்மணி கவலை தெரிவித்துள்ளார்.


அதேபோல், தனது தந்தை கோபால், தாய் சரஸ்வதி மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த லதா பானுமதி, அருட்செல்வன் கோவிந்தாராஜின் நிலை என்னவென்றே தெரியவில்லை எனக்கூறிய கோபாலின் மகள் பொற்செல்வி,


அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளதாகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்ற தகவல் தெரிந்தால் மட்டும்கூட போதும் எனவும் கண்கலங்கினார்.
தனது மனைவி விஜயலட்சுமியையும் கண்டுபிடித்து கண்முன் நிறுத்த வேண்டும் என அவரது கணவர் முருகேசனும் கோரிக்கை விடுத்துள்ளார்.


உயிரே என் மகள் தான்...
தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டியை சேர்ந்த செல்வம், அவரது மனைவி சித்ராதேவி, தாய் சரஸ்வதி ஆகிய 3 பேரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை

எனக்கூறிய செல்வத்தின் அண்ணன் சத்தியநாதன், அடுத்து பேச முடியாமல் நா தழுதழுத்தார். இதேபோல், கதறிய சித்ராதேவியின் தாய் தனது உயிரே தன் மகள்தான் எப்படியாவது அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என கண்ணீர் சிந்தினார்.

அரசு உதவி செய்ய வேண்டும்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரின் நிலை என்ன? என தெரியாமல் நிலைகுலைந்துள்ள உறவினர்கள், அவர்களின் குரலையாவது கேட்டால் போதும் என கையெடுத்து கும்பிட்டனர். தனது நீண்டநாள் ஆசையை நிறைவேற்ற மாட்டாயா? என பலமுறை கேட்டுக் கொண்டே இருந்ததால் தான் மனைவி மீனாட்சியை யாத்திரைக்கு அனுப்பி வைத்ததாகவும், 2 பிஞ்சு மகன்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை? எனவும் உடைந்து அழுத காஞ்சிபுரம் கனிகண்டீஸ்வரர் கோவில் தெரு பகுதியை சேர்ந்த கணவர் நந்தகுமார், அரசு ஆவன செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

கலங்கிய தாய்...
வீடியோ காலில் நதியையும், மலையையும் தன்னிடம் காட்டி மகள் மகிழ்ச்சியடைந்தது தான் கடைசி வார்த்தை என கலங்கிய மீனாட்சியின் தாய் சிவகாமி, அதன்பிறகு செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆனதாக தெரிவித்தார்.


இதேபோல், யாத்திரைக்கு சென்ற நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பகுதியை சேர்ந்த பழனிவேல்-அருள்மணி தம்பதியின் நிலை குறித்தும் தெரியவில்லை. பழனிவேல் நாமக்கல் மாவட்ட முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்டம் கனகபுரத்தைச் சேர்ந்த பாரத் மெஸ் உணவக உரிமையாளர் நடராஜனும், அவரது மனைவி கிருஷ்ணவேணியையும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனக்கூறிய உறவினர் தண்டபாணி, அவர்களை கண்டுபிடித்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved