Also Watch
Read this
By: Web Team

பீகார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று வழக்கம்போல் காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. மக்களவை கூடியதும் கேள்வி நேரம் தொடங்குவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதை எதிர்த்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கண்டித்தும் வாக்குகள் திருடப்படுவதாகக் குற்றம் சாட்டியும் கோஷங்களை எழுப்பினர்.எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
மாநிலங்களவையிலும் அமளி:
மாநிலங்களவை, துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையில் கூடியது. பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி 20 நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அவை ஏற்கப்படாது என்றும் அவர் கூறினார். இதையடுத்து, மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளி காரணமாக அவையை ஒத்தி வைப்பதாக ஹரிவன்ஷ் அறிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்:
முன்னதாக, எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரியங்கா காந்தி உள்ளிட்ட கூட்டணிக்கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:
வாக்கு திருட்டு, வாக்கு மோசடி, வாக்குகளை முறைகேடாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு எதிரான ஒரு சூழலை நாடு முழுவதும் உருவாக்க வேண்டும் என்பது எங்கள் கட்சியின் நிலைப்பாடு. மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இதுபோன்ற திருட்டு மூலம் அவர்கள் அரியணையில் அமர்ந்தால், அது ஜனநாயகத்திற்கு நன்மை பயக்காது. இது அரசியலமைப்பின் படுகொலை.
இவ்வாறு கார்கே குற்றம் சாட்டினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved