Also Watch
Read this
ஈரோட்டில் செப்டம்பர் 17ஆம் தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நாளில் இந்து முன்னணியின் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்க இருப்பதாகக் கூறி, அனுமதி மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரே நேரத்தில் 3 கட்சியினர்...
அண்ணா பிறந்தநாள் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததாக திமுக குற்றம் சாட்டிய நிலையில், மூன்று கட்சியினர் ஒரே நேரத்தில் கேட்டதால் முதலில் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் பின்னர் அனுமதி வழங்கப்பட்டதாகவும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

வேலூரில்...
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில், பேரறிஞர் அண்ணாவின் 118ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாளை குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணா சிலை வரை திமுக சார்பில் பேரணியாக சென்று, அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க திமுக தரப்பில் காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு காவல்துறை எழுத்துப்பூர்வமாக அனுமதி மறுத்ததாகவும், இருந்த போதும் நாளை பேரணி நடைபெறும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

காவல்துறை விளக்கம்
இதுகுறித்து குடியாத்தம் நகர காவல் துறையினரிடம் கேட்டபோது, அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு குடியாத்தம் நகரில் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் திமுக, அதிமுக, மற்றும் பல அமைப்பை சேர்ந்தவர்கள் என அனுமதி கேட்டிருந்தனர். மேலும் விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாள் என்பதால் அந்த சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக இருக்கும். ஆகவே மாலை அணிவிக்க மட்டும் அனுமதி அளித்து பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், தற்போது திமுக பேரணி நடத்த குடியாத்தம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் எழுத்துப் பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஈரோட்டிலும் போலீசார் அனுமதி
விநாயகர் சிலை ஊர்வலம் நடப்பதாக கூறி, ஈரோட்டில் செப்டம்பர் 17ஆம் தேதி தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவையொட்டி தி.க. பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். பெரியார் பிறந்தநாள் ஊர்வல அனுமதி மறுப்புக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தகுந்த பாதுகாப்புடன் அனுமதி வழங்கப்படும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved