Also Watch
Read this
நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 168 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காத்மண்டு நகரில் இருந்து எமது செய்தியாளர் மதியழகன் தகவல் கூறி உள்ள நிலையில், உடல் பாகங்களை ஒப்படைப்பதிலும் சிக்கல் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் வேதனை என்னவென்றால் மீட்கப்பட்ட உடல் பாகங்களை யாரிடம், எந்த அடிப்படையில், எதனை ஆதாரமாக வைத்து, எப்படி ஒப்படைப்பது? என்பதுதான் கள நிலவர முக்கிய தகவலாக உள்ளது.

தவிப்பில் உறவினர்கள்
ஆன்மீக சுற்றுலா சென்ற உறவுகள் உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா? என்பது தெரியாமலேயே உறவினர்கள் ஒருபக்கம் துடித்துக் கொண்டிருக்க, மண்ணில் புதைந்தபடி சில உடல்கள், முகம் சிதைந்தபடி சில உடல்கள், கால் ஒரு பக்கம் கை ஒருபக்கம், இடுப்புக்கு மேல் மட்டும் சில உடல் என மனித உடல் உறுப்புகள் ஆங்காங்கே உருக்குலைந்து மீட்கப்படுவதை அவர்கள் எப்படி தாங்குவார்கள்?

உடல்கள் கிடைத்தும்...
நேபாள அதி பயங்கர வெள்ளம் நினைத்து பார்க்க முடியாத அளவில் சாலைகள், கட்டிடங்கள், பாலங்கள் என அத்தனையையும் அடித்துச் சென்று 500க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியது. இதில், 168 உடல்களை மீட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர்? ஆணா? பெண்ணா? என்பதைகூட அறிய முடியாத அளவுக்கு உடல் பாகங்களின் நிலை உள்ளது.

தோண்ட தோண்ட சிக்கல்
சுமார் 10 அடி உயரத்திற்கு களிமண்ணும், மரக்கட்டைகளும் சூழ்ந்து, அதில் இருந்து மீட்கப்படும் உடல் பாகங்களை சரியாக உறவினர்களிடம் ஒப்படைப்பதிலும் நேபாள அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணியே பெரும் சவாலாக உள்ள நிலையில் உடல் பாகங்களை ஒப்படைப்பதில் அதைவிட பெரிய சவால் உள்ளது என்பதே உண்மை.

தோண்ட தோண்ட மண்ணுக்கு அடியில் மனித உடல்கள் புதைந்து கிடக்கும் நிலையில் அந்த உடல்களை வெளியே இழுத்து கொண்டு வரும்போது அதில் பாகங்கள் தனித்தனியாக பிரிந்து வருவதும் மனதை ரணமாக்குகிறது.

மருத்துவ துறைக்கு சவால்
பிரிந்து கிடக்கும் உடல் பாகங்களை டிஎன்ஏ டெஸ்ட் மூலம் மேட்ச் செய்வது என்பதும் அவ்வளவு எளிதல்ல, விரல்விட்டு எண்ணும் அளவில் உயிரிழப்புகள் என்றால் அவர்களது உறவினர்கள் மூலம் டிஎன்ஏ பரிசோதனை செய்யலாம், ஆனால் பலநாட்டு மனிதர்கள் இதில் உயிரிழந்துள்ளதால் டிஎன்ஏ பரிசோதனையுமே மருத்துவத்துறைக்கு சவால்தான்.

வேறு என்ன கூற முடியும்?
இப்படி, எந்த பக்கம் திரும்பி பார்த்தாலும் மீட்பு பணியிலிருந்து சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைப்பது வரை அத்தனையுமே அதிசிக்கலாக இருப்பதால் கண்ணீரோடு காத்திருக்கும் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்வதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக காத்மண்டு நகரில் இருந்து ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமாருடன் செய்தியாளர் மதியழகன்...
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved