Also Watch
Read this
சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ஆளும் கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே அனல் பறந்த விவாதம், ஒரு கட்டத்தில் ஜி-ஸ்கொயர் மாப்பிள்ளையா? அல்லது லாட்டரி மருமகனா? என்ற கட்டத்தை நோக்கி நகர்ந்ததால், அவையே அல்லோல கல்லோலமானது.

தமிழ்நாடு சட்டசபையில்...
தமிழக சட்டசபையில் இயற்கை வளங்கள், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் ஆஸ்டின், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்ததை பார்த்தால் முதலீட்டாளர்கள் தவறாக நினைக்க மாட்டார்களா? என கேள்விக் கணையை வீச, உடனடியாக எழுந்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பரந்தூர் விமான நிலையமா? அல்லது விவசாயிகளின் கண்ணீரா? என்று கேட்டால், முதலமைச்சர் விஜய் விவசாயிகள் பக்கம் தான் நிற்பார் என்றார்.

ரியல் எஸ்டேட் மோசடி
பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து என்கிற அறிவிப்பால் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும் என திமுக முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்து பேசிய ஆதவ் அர்ஜுனா, ஊழல் இல்லாத அரசு இருந்தால் தொழில் முதலீடுகள் தன்னால் ஈர்க்கப்படும் என்றார். மேலும் பரந்தூர் விமான நிலையம் அமையவிருந்த இடத்தைச் சுற்றி மிகப்பெரிய ரியல் எஸ்டேட் மோசடி நடந்திருப்பதாகவும் கூறி பகீர் கிளப்பினார்.

என்ன செய்யப் போகிறீர்கள்?
அப்போது பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடும் வழங்கப்பட்டு விட்ட நிலையில், எடுக்கப்பட்ட நிலங்களை என்ன செய்யப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், கையகப்படுத்தப்பட்டது வெறும் 48 சதவீத நிலங்கள் தான் என விளக்கம் அளித்தார்.
திமுகவினர் கொந்தளிப்பு
மேலும், சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதாக தவறான தகவல் தெரிவிக்கப்படுவதாகவும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு கூட மேற்கொள்ளப்படவில்லை எனவும் கூறிய அமைச்சர் நிர்மல்குமார், இவ்வளவு கதறல்களும் ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்காவும், கருப்பு பணத்தை முதலீடு செய்தவர்களுக்காகவும் தான் என்று கூற, திமுக உறுப்பினர்கள் கொந்தளித்தனர்.

லாட்டரி மருமகனுக்காக?
இந்த அளவில் விவாதத்தை முன்னெடுக்க விரும்பினால், அதே மொழியில் பதில் சொல்ல தங்களுக்கும் தெரியும் என்ற திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, எந்த லாட்டரி மருமகனுக்காக புதிய விமான நிலையத்தை நீங்கள் கொண்டு வருகிறீர்கள் என்று நான் கேட்கவா? என்று பதிலடி கொடுத்தார். சென்னையின் புவியியல் அமைப்பில் வேறு எந்த இடத்திலும் விமான நிலையம் கொண்டுவர முடியாது என்பதை ஆய்வு செய்து அறிந்து கொண்ட பிறகே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்த தங்கம் தென்னரசு, இவ்வளவு தூரம் கடந்து வந்த ஒரு திட்டத்தை கை விடுவது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரித்தார்.

அமைச்சர் கீர்த்தனா விளக்கம்
இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்க பணிகளை நீங்கள் ஏன் கிடப்பில் போட்டீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். 'நிலம் கையகப்படுத்துதல், நியாயமான இழப்பீடு, மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்றம் சட்டம் 2013'ன் படி ஒரு திட்டம் சில காரணங்களுக்காக கைவிடப்பட்டால், அதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வேறு பொது திட்டத்திற்கு பயன்படுத்த வழிவகை செய்வதாக அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்தார். பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் பற்றவைத்த நெருப்பு, அவையில் அனல் பறந்த நிலையில், சபாநாயகரின் தலையீட்டாலும் அமைச்சரின் விளக்கத்தாலும் தணியவைக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved