Also Watch
Read this
By: Manigandan Raja

ஆரணி அருகே 2019-2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் இருளர் இன மக்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்பில் வீட்டின் மேல் தள சுவர் இடிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே தச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருளர் இன மக்களுக்காக கடந்த 2019-2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஒரு வீட்டிற்கு ரூ.3 லட்சம் மதிப்பில் மொத்தம் 72 குடியிருப்புகள் கட்டப்பட்டன.
வீடுகள் கட்டப்பட்டு சுமார் ஆறு ஆண்டுகளே ஆன நிலையில், தரமற்ற கட்டுமானப் பணிகள் காரணமாக குடியிருப்புகள் ஆங்காங்கே சேதமடைந்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் பல குடும்பங்கள் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு சென்றுவிட்ட நிலையில், தற்போது சுமார் 25 குடும்பங்கள் மட்டுமே அங்கு வசித்து வருகின்றனர்.
தற்போது தொடர் மழை பெய்து வரும் நிலையில், வீடுகளின் மேற்கூரை மற்றும் சுவர்கள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இருளர் இன மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு பெய்த கனமழையின்போது ரஞ்சிதா என்பவரின் வீட்டின் மேல் தளத்தில் இருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் குடியிருப்பு பகுதியில் போதிய கழிப்பறை வசதி, தெருவிளக்குகள், பக்க கால்வாய்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இருளர் இன மக்கள் கூறுகையில், வீடுகள் கட்டப்பட்டு ஆறு ஆண்டுகளே ஆன நிலையில், மேற்கூரை மற்றும் சுவர்கள் சேதமடைந்து வருவதாகவும், அடிப்படை வசதிகள் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்தனர்.
எனவே, குடியிருப்புகளை ஆய்வு செய்து சேதமடைந்த வீடுகளை சீரமைத்து, தெருவிளக்கு, கழிப்பறை, பக்க கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இல்லையெனில், இந்த வீடுகளை விட்டு மீண்டும் பழையபடி காட்டுப்பகுதிக்கு சென்று விடும் நிலை ஏற்படும் எனவும் இருளர் இன மக்கள் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved