Also Watch
Read this
By: Fyrose Banu

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில், சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, வனத்துறை சார்பில் விழிப்புணர்வு கலைப்பயணம் நடைபெற்றது. களக்காடு–முண்டந்துறை புலிகள் காப்பகம், பாபநாசம் சூழல் சரகம் மற்றும் அரும்புகள் அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி மூலம், பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் அவசியம் மற்றும் வனப்பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

திருவிழா காலங்களில் வனப்பகுதிகளை தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்திய அதிகாரிகள், வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாமென கேட்டுக்கொண்டனர். மேலும், கழிவறைகளை மட்டுமே பயன்படுத்துதல், வனத்தீ ஏற்படாமல் கவனம் செலுத்துதல், உணவு மற்றும் கழிவுகளை வனப்பகுதியில் கொட்டாமல் பாதுகாப்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.


அத்துடன், வனப்பகுதியில் சோப்பு, ஷாம்பு போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என்றும், மது மற்றும் புகையிலைப் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வன உயிரின காப்பாளர் சக்திபிரசாத், கதிர்காமன், வனவர் செண்பகம் மற்றும் பாவூர்சத்திரம் ஆய்வாளர் வேல்கனி, சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved