Also Watch
Read this
By: Fyrose Banu

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிக்கு உட்பட்ட விவேகானந்தபுரம் புதிய இராமானுஜர் நகரில் வசித்து வருபவர் புருஷோத்தமன். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் சுமார் 2.35 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகே நிறுத்திய புருஷோத்தமன், வாகனத்தை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்று உணவு அருந்தியுள்ளார்.

பின்னர் சுமார் 3 மணியளவில் வெளியே வந்து பார்த்தபோது, வீட்டின் அருகே நிறுத்தியிருந்த தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அருகிலிருந்த வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தின் அருகே அமர்ந்து அக்கம் பக்கத்தை நீண்ட நேரமாக நோட்டமிடுவது பதிவாகியுள்ளது.
மேலும், ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தை சாதகமாக பயன்படுத்திய அந்த இளைஞர், லாவகமாக இருசக்கர வாகனத்தின் பூட்டைத் திறந்து, வாகனத்தை அங்கிருந்து ஓட்டிச் செல்லும் காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது பட்டப்பகலில், வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இருசக்கர வாகனம் திருடப்படும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு, கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved