Also Watch
Read this
By: Fyrose Banu

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வெள்ள முனியன்கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற கிடா வெட்டு பூஜை திருவிழாவில் பக்தர்களுக்கு1,000 கிலோ ஆட்டுக்கறி சமைத்து 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்ட்டது. கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த வெள்ள முனியன்கோயிலில் நடைபெற்ற கிடா வெட்டு பூஜை திருவிழா பக்தி பரவசத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவில் கந்தர்வக்கோட்டை மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமியை வழிபட்டனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி அதிகாலை முதலே கோயிலுக்கு பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வரத் தொடங்கினர். வெள்ள முனியன்சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்ற நிலையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற கிடா வெட்டு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
இந்த திருவிழாவின் மற்றொரு சிறப்பம்சமாக நடைபெற்ற அன்னதானம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சுமார் 1,000 கிலோ ஆட்டுக்கறி கொண்டு பிரமாண்டமாக உணவு தயாரிக்கப்பட்டது. பின்னர் கந்தர்வக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்காக கோயில் வளாகத்தில் பிரமாண்ட சமையல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிகாலை முதலே சமையல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் பக்தர்கள் ஆர்வத்துடன் அன்னதானத்தில் பங்கேற்றனர்.

இத்திருவிழாவையொட்டி கோயில் வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் மக்கள் கூட்டத்தால் களைகட்டின. பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் சுவாமியை தரிசித்து குடும்ப நலன், உடல்நலம், விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து வழிபட்டனர். கிடா வெட்டு பூஜை நடைபெறும் இடம் முதல் அன்னதானம் நடைபெற்ற பகுதி வரை எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டதால் வெள்ள முனியன்கோயில் திருவிழா களைகட்டியது.


கோயில் நிர்வாகத்தினர், விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கிடா வெட்டு பூஜை... சிறப்பு வழிபாடு... 1,000 கிலோ ஆட்டுக்கறியில் பிரமாண்ட அன்னதானம் 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு என பல்வேறு சிறப்புகளுடன் நடைபெற்ற வெள்ள முனியன்கோயில் திருவிழா கந்தர்வக்கோட்டையில் பெரும் விழாக்கோலத்தை ஏற்படுத்தியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved