Also Watch
Read this
தொகுதி மறுசீரமைப்பு மசோதாவின் சாராம்சங்கள் என்னவென்று தெரியாமல் எதிர்ப்பதா? என இபிஎஸ் தெரிவித்துள்ளார். பாமக, பா.ஜ.க, உள்ளிட்ட கட்சியினரும் முதலமைச்சரின் தனி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில்...
இதுதொடர்பாக, எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;
மறுவரையறை குறித்த அதிமுக நிலைப்பாடு தெளிவானது. மாநிலங்களுக்கு குறிப்பாக, தமிழ்நாடு போன்ற மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு 1971 மக்கள் தொகை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட விகிதாச்சார பிரதிநிதித்துவம் குறையக்கூடாது. தமிழ்நாட்டிற்கு தற்போது 39 எம்பிக்கள் உள்ளனர்.
வெளிப்படையாக இல்லை...
மொத்த எம்பிக்கள் எண்ணிக்கையான 543 இடங்களில், 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 7.18% விகிதாச்சார பிரதிநிதித்துவம் தொகுதி மறுவரையறையில் குறையக்கூடாது. இதுதான் எங்கள் தேர்தல் அறிக்கையிலும் அதிமுக சார்பாகவும் தெரிவித்து உள்ளோம். தொகுதி மறுவரையறையில் மாநிலங்களுக்கான தற்போதுள்ள விகிதாச்சாரம் குறையாமல் பாதுகாக்கப்படும் என்பது வெளிப்படையாக இல்லை.

தமிழ்நாட்டிற்கு 59 இடம்
இந்த உறுதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியதால், மத்திய உள்துறை அமைச்சர் ஏப்ரல் 16ஆம் தேதியன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பேசியபோது, ’தமிழ்நாட்டிற்கான விகிதாச்சார பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும்,’ என உறுதி அளித்தார்.
இதன்படி, 7.18% என்ற விகிதாச்சாரம் கடைபிடிக்கப்படுவதால் உறுப்பினர் எண்ணிக்கை 50% உயரும். தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 20 இடம் சேர்த்து 59 இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

நிர்வாக வசதிக்காக...
தமிழ்நாட்டில் பெரிய ஊராட்சிகள் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்படுகிறது. பெரிய ஊராட்சி ஒன்றியங்கள் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்படுகின்றன. பெரிய தாலுக்காக்களை பல தாலுக்காக்களாக பிரித்துள்ளனர். நிர்வாக வசதிக்காக பல கோட்டங்கள் பிரிக்கப்படுகின்றன. அதேபோல பல தொகுதிகள் அடங்கிய பெரிய மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்படுகின்றன. அதிமுக ஆட்சியில் நான் முதலமைச்சராக இருந்தபோது, 6 மாவட்டத்தை பிரித்து உள்ளோம்.

எந்த தவறும் இல்லை
புதுச்சேரியில், மொத்த வாக்காளர் எண்ணிக்கையே 10.2 லட்சம் பேர் தான். அதற்கு ஒரு முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் புதுச்சேரி மாநிலத்தை விட அதிகமான வாக்காளர் எண்ணிக்கை கொண்ட பல மக்களவை தொகுதிகள் உள்ளன. ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் 20,20,388 வாக்காளர்கள், திருவள்ளூர் தொகுதியில் 19,62,232 வாக்காளர்கள் உள்ளனர். சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி, தமிழகத்திலே அதிக வாக்காளர் எண்ணிக்கை உள்ள தொகுதி. அந்த தொகுதியில் 5,36,991 வாக்காளர்கள் உள்ளனர். எனவே, நிர்வாக வசதிக்காக வாக்காளர்கள் அதிகம் உள்ள மக்களவை தொகுதி மற்றும் சட்டமன்ற தொகுதியை வாக்காளர் எண்ணிக்கை மற்றும் பரப்பளவின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதில் எந்த தவறும் இல்லை.

மகளிர் இட ஒதுக்கீடு
முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில் 1998ல், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், மத்திய ஆட்சியில் அதிமுக பங்கு வகித்தது, தம்பிதுரை, சட்டத்துறை அமைச்சராக இருந்தார். நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 33% மகளிர் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்ட மசோதாவை நாடாளுமன்றத்திலே தாக்கல் செய்து பேசிக் கொண்டிருந்தபோது, எதிர்தரப்பில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மசோதாவை கிழித்தெறிந்து விட்டார்கள்.
அரசியல் காரணம், அதிமுக எதிர்ப்பு
தற்போது, நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்வதற்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழக அரசு, அரசியல் காரணங்களுக்காக பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த தீர்மானத்தை அவசர அவசரமாக சட்டமன்றத்தில் அரசியல் தனி தீர்மானமாக கொண்டு வருகிறது என்று நாங்கள் கருதுகிறோம். இந்த சூழ்நிலையில் மத்திய அரசு கொண்டுவர உள்ள தொகுதி மறுவரையறையில், தமிழ்நாட்டிற்கு சாதகமாக உள்ளதா? பாதகமாக உள்ளதா? என்பது பற்றி எதுவுமே தெரியாத நிலையில், அரசியல் காரணங்களுக்காக தமிழக வெற்றிக்கழக அரசு கொண்டுவந்த இந்த தீர்மானத்தை அதிமுக எதிர்க்கிறது.

மகளிர் இட ஒதுக்கீடுக்கு ஆதரவு மகளிர் இட ஒதுக்கீடுக்கு ஆதரவு
இந்த தீர்மானத்தில், வரவிருக்கும் மக்களவை பொது தேர்தலிலும் அதன் பிறகு நடைபெறுகிற சட்டமன்ற பொது தேர்தலிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டு பலனை பெண்களுக்கு பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தீர்மானத்தில் குறிப்பிட்டிருக்கிறது. அந்த தீர்மானத்தை மட்டும் அதாவது நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 33% பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அந்த தீர்மானத்தை மட்டும் ஆதரித்து அமர்கின்றேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved