Also Watch
Read this
இந்தியத் திருநாட்டின் பெருமைமிகு 80ஆவது சுதந்திர தினப் பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தியாகத்தின் அடையாளமான தேசியக்கொடியை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி ஏற்றினார்.

செங்கோட்டையில் தொடர்ந்து 13ஆவது முறையாக மூவண்ணக் கொடியேற்றிய பிரதமர் மோடி, பட்டொளி வீசிப் பறந்த புகழ் கொடியேற்றி வரலாற்றுப் பெருமையை தனதாக்கிக் கொண்டார். வரலாற்றில் முதன்முறையாக டெல்லி சுதந்திர தின விழாவில் ஒலித்த வந்தே மாதரம் இசை,
தேசிய கீதத்துக்கு முன்பாக ஒலிக்கவிடப்படுவது கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து இசைக்கப்பட்டது.

இந்திய சுதந்திர நாள் விழா
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 80வது சுதந்திர தினம் நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும் நாட்டுப்பற்றுடனும் கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றினார்.

காந்தி நினைவிடத்தில் மரியாதை
சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, டெல்லி செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமரை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத், பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர், டெல்லி பகுதிக்கான ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் சேத்தியை பிரதமருக்கு பாதுகாப்புத் துறை செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடிக்கு பாதுகாப்புப் படை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

வந்தே மாதரம்...
இதனையடுத்து, தேசியக் கொடியை ஏற்றும் இடத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது, முதல்முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. அப்போது அனைவரும் எழுந்து நின்று தேசியப் பாடலுக்கு மரியாதை அளித்தனர்.

பின்னர், பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரதமருக்கு கேப்டன் சோனியா சிங் சவுகான் உதவினார். 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடிக்கு மரியாதை தரப்பட்டது. அப்போது, விமானப் படை சார்பில் ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்கள், சிவில் மற்றும் ராணுவ உயரதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved