Also Watch
Read this
By: Fyrose Banu

அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீ தையல்நாயகி அம்மன் கோயிலில், ஆடி கடை வெள்ளியை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பூஜைகளை முடித்துவிட்டு கோயில் பூசாரி சீமான் வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை கோயிலுக்கு வந்து பார்த்தபோது, கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, பூசாரி மற்றும் பொதுமக்கள் செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து புகார் அளித்தனர். புகாரின் பேரில் செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை மர்ம நபர்கள் வேறு பகுதிக்கு மாற்றி வைத்து, கேமரா பதிவுகள் கிடைக்காத வகையில் செய்திருப்பது தெரியவந்தது.

மேலும், கோயில் உண்டியலை உடைத்து அதில் இருந்ததாக கூறப்படும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தையும், அம்மன் சிலையின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த சுமார் அரை பவுன் தங்கத் தாலியையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோயிலில் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு, கோயில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved