Also Watch
Read this
By: Manigandan Raja

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சரவணம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான விநாயகா பைப்பர்ஸ் தேங்காய் மட்டை ஆலையால் காற்று மாசுபடுவதாகவும், ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுத் துகள்களால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறி, கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தொப்பம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தேங்காய் மட்டை ஆலையில் இருந்து வெளியேறும் நுண்ணிய கழிவுத் துகள்கள் காற்றில் கலந்து அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு பரவி வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதுடன், வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் கழிவுத் துகள்கள் படிந்து வருவதாகவும் அவர்கள்
தெரிவித்தனர். மேலும், ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் கால்நடைகள் உயிரிழப்பதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் ஏற்கனவே புகார் மனுக்கள் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு தொப்பம்பட்டியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது தேங்காய் மட்டை ஆலையின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், காற்று மாசுபாட்டை குறிக்கும் வகையில், முகக்கவசம் அணிந்து கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
ஆனால் முன்னதாக கருப்பு கொடியுடன் வந்த பொதுமக்களை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் கருப்புக்கொடி காட்ட அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதையடுத்து, ஆலையின் செயல்பாடுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து கிராம சபையில் விவாதிக்கப்பட்டதுடன், உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுமக்களின் கோரிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved