Also Watch
Read this
By: Fyrose Banu

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கஞ்சாநகரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வழி வீரப்பன் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற பால்குடம் எடுத்து வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இந்நிலையில் ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு கோயிலின் 27ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது. 
இதையொட்டி காவிரி கரையில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக புறப்பட்டனர். மேளதாள வாத்தியங்கள் முழங்க, வீரன் வேடம் அணிந்த பக்தர்கள் கம்பீரமான நடனத்துடன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 
வழிநெடுகிலும் பொதுமக்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர். மேலும், காவிரி கரையில் இருந்து கோயில் பூசாரி சுமார் 10 அடி உயரம் கொண்ட பிரமாண்ட திரிசூலத்தை பால்குடத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலில் வைத்து வழிபாடு செய்தார்.

இதனைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு ஸ்ரீ வழி வீரப்பன் சுவாமிக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved