Also Watch
Read this
By: Fyrose Banu

திருப்பூர் மாவட்டம் உடுமலை – மூணாறு சாலை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருவதால், வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளை நோக்கி வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வாகனங்களை விட்டு இறங்கக் கூடாது, வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என வனத்துறை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. 
இந்நிலையில், நேற்று மாலை உடுமலை – மூணாறு சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், சாலையோரத்தில் நின்றிருந்த காட்டு யானை அருகே சென்று ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். யானை முன் சாகசமாக நடந்து கொண்ட அவர்களின் செயல்பாடு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு செயல்படுவது ஆபத்தானது மட்டுமல்லாமல் சட்டவிரோதமானதும் ஆகும். எனவே, வீடியோவில் பதிவாகியுள்ள வாகன எண்ணை வைத்து சம்பந்தப்பட்ட இளைஞர்களை கண்டறிந்து, கடும் அபராதம் விதிக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், வனப்பகுதிகளில் இதுபோன்ற சாகசங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved