Also Watch
Read this
By: Manigandan Raja

ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் ஒரு பகுதி
ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதி என அறிவித்துள்ள அதிபர் டிரம்ப், AI மூலம் உருவாக்கப்பட்ட வரைபடத்தையும் வெளியிட்டுள்ளார். போரை முடிவுக்குக் கொண்டு வருவதிலும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதிலும் அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
தங்களது கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்கும் வரை, ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக மூடியே இருக்கும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், வளைகுடா நாட்டின் வரைபடத்தில் ஹோர்முஸ் நீரிணையை வட்டமிட்டு, இது அமெரிக்காவின் ஒரு பகுதி என டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் மூடல்
ஜூன் மாதம் கையெழுத்தான இடைக்கால ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும் என ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்குவது, எண்ணெய் மீதான தடைகளை நீக்குவது, முடக்கப்பட்ட ஈரானின் சொத்துக்களை விடுவிப்பது மற்றும் அனைத்து முனைகளிலும் அச்சுறுத்தல்களையும், ராணுவ நடவடிக்கைகளையும் முடிவுக்கு கொண்டு வருவது ஆகியவை இந்த நிபந்தனைகளில் அடங்கும் என ஈரான் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தும் காலிபாப் கூறியுள்ளார்.
காபூலில் உள்ள பள்ளிக்கு அருகே குண்டு வீச்சு
ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பள்ளிக்கு அருகே கையெறி குண்டுகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் சுமார் 9 சதவீதமாக உள்ள ஹசாரா இன சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் ஒரு பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. பெரும்பாலும் ஷியா முஸ்லிம் பிரிவை சேர்ந்த ஹசாரா இன மக்களை சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved