Also Watch
Read this
By: Manigandan Raja

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காவல் எல்லைக்குட்பட்ட கைலாசபட்டி பகுதியில், லாரி ஒன்றில் உர மூட்டைகள் ஏற்றி கடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தென்கரை காவல்துறையினர், வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த லாரியையும், அங்கிருந்த நபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், சந்தேகமடைந்த காவல்துறையினர் லாரியைச் சோதனையிட்டனர். காவல்துறையின் தீவிர விசாரணையில் தமிழக அரசால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உர மூட்டைகளை, தேனி மாவட்டம் முழுவதிலும் உள்ள இடைத்தரகர்கள் மற்றும் மர்ம நபர்கள் சட்டவிரோதமாகச்
சேகரித்துள்ளனர்.
அவ்வாறு சேகரிக்கப்பட்ட அரசு உர மூட்டைகள், கைலாசபட்டியைச் சேர்ந்த மாடசாமி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதும் அரசுக்குச் சொந்தமான சாக்கு பைகளை அகற்றிவிட்டு, வேறு சாதாரண பைகளில் உரங்களை மாற்றி அடைத்து, கைலாசபட்டி பகுதியிலிருந்து சட்டவிரோதமாக கேரளாவிற்கு கடத்த திட்டமிட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து லாரியில் இருந்த சுமார் 450 மானிய உரம் மூட்டைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட மாடசாமி என்பவரைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு நிலவுவதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்பட்ட உரம் கேரளாவுக்கு நடத்தப்பட்ட சம்பவம் விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved