Also Watch
Read this
By: Fyrose Banu

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து ராஜ வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து, விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் பரமத்தி வேலூரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து ராஜ வாய்க்காலுக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர், கடந்த 22 நாட்களுக்கு முன்பு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ராஜ வாய்க்கால் பாசனத்தை நம்பி சுமார் 30ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை, கோரை, வெற்றிலை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக வெற்றிலை சாகுபடியில் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து வரும் நிலையில், தண்ணீர் இல்லாததால் பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராஜ வாய்க்காலில் விவசாயிகளின் பாசனத் தேவைக்காக தண்ணீர் திறக்க வலியுறுத்தி, பரமத்தி வேலூர் நீர்வளத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டதுடன், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவாக வேலூர் பகுதியில் வணிகர் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் வேலூர் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன
கடையடைப்பு காரணமாக ஒருநாள் வர்த்தகம் மூலம் சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படக்கூடும் என வணிகர் சங்கத் தலைவர் சுந்தரம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற உள்ளது. ராஜ வாய்க்காலுக்கு உடனடியாக தண்ணீர் திறந்து, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களை பாதுகாக்க வேண்டும் என்பதே விவசாயிகள் மற்றும் வணிகர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved