Also Watch
Read this
By: Manigandan Raja

திருப்பூர் உடுமலை அடுத்த போடிபட்டியைச் சேர்ந்த ஜெகதீஷ் (33), முனைவர் பட்டப்படிப்புக்காக கடந்த 2023-ம் ஆண்டு தைவான் சென்றுள்ளார். அங்கு டேட்டிங் செயலி மூலம் தைச்சுங் நகரைச் சேர்ந்த ஜோயிங்யிங் (35) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
ஜெகதீஷ் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாகவும், இதனை நம்பிய அந்த பெண் அவரது படிப்பு, தங்குமிடம் உள்ளிட்ட தேவைகளுக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஜெகதீஷ் இந்தியா திரும்பியுள்ளார்.
பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேசி மீண்டும் வந்து திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த அவர், பின்னர் அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. கடந்த ஐந்து மாதங்களாக தொடர்பு கொள்ள முயன்றும் முடியாததால், அந்த பெண் உடுமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் உதவியுடன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ஜெகதீஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக உடுமலை வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved