Also Watch
Read this
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்த தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுவது அரசிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.

2ஆவது விமான நிலையம் தேவை
இதுதொடர்பாக, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் சோபா மாடல் அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து, எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2ஆவது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் திமுக அரசால் உருவாக்கப்பட்டது.

அனுமதி கிடைத்து விட்டது
இந்த திட்டத்திற்கு, Airports Authority of India, Union Civil Aviation Ministry உள்ளிட்டவை ஆய்வு செய்து, அனுமதி தந்துவிட்டன. இத்தகைய கடினமான அனுமதிகளைப் பெறுவது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு அதிகமான இழப்பீடு, மறு குடியமர்வு போன்ற முக்கியமான பணிகள் அனைத்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த போதே நடைபெற்றன.

அற்ப அரசியல் காரணங்களுக்காக...
இதற்காக அரசுத் தரப்பில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவை எல்லாம் நடந்த பிறகு, அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழலும் எழுந்து உள்ளன.

அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆகவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும் தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved