Also Watch
Read this
’காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய விமான நிலையம் கட்டும் திட்டம் கைவிடப்படும்,’ என, தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதலமைச்சர் விஜய் அறிவித்து உள்ளார். புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும், விவசாய நிலங்கள், மக்கள் பாதிக்காத வகையில் இடம் தேர்வு செய்யப்படும் என்றும் முதல்வர் விஜய் உறுதி அளித்தார்.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து விவாதிக்கக் கோரி, பேரவையில் திமுக முழக்கமிட்ட போது, சபாநாயகர் அனுமதி அளிக்காததால் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

பரந்தூர் விமான நிலைய திட்டம்
இதுதொடர்பாக, சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியதாவது;
ஏகனாபுரம் மற்றும் அதையொட்டி அமைந்துள்ள கிராம மக்களின் போராட்டத்தை அறிந்து கடந்த 2025, ஜனவரி 20ஆம் தேதி, அங்கு சென்று கிராமமக்களின் குறைகளை கேட்டறிந்தேன். அப்போது சில அறிவிப்புகளை நான் வெளியிட்டேன்.

பரந்தூரில் அமைய கூடாது...
பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள 12 கிராமங்களில் அமைய உள்ள விமான நிலையத்தை எதிர்த்து போராடும் கிராம மக்களுடன் உறுதியாக நான் நிற்கிறேன். நீண்ட நாட்களாக இந்த திட்டத்துக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தெரிவித்துக் கொள்கிறேன். விக்கிரவாண்டியில் அக்டோபர் 2024ல் நடைபெற்ற மாநாட்டில், பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். தொழில் வளர்ச்சி மற்றும் அதற்கான விமான நிலையங்களின் பங்கு குறித்து நான் நன்கு அறிவேன். அதற்கான எனது முழு ஆதரவு உண்டு. ஆனால், பரந்தூரில் இந்த விமான நிலைய திட்டம் அமைய கூடாது.

பரந்தூரில் புதிய விமான நிலைய திட்டம் கைவிடப்படும்
இதுகுறித்து, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று அறிவித்தேன். குறைவான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வகையில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டுமென தெரிவித்திருந்தேன். மக்களிடம் அன்று அறிவித்ததை நிறைவேற்றும் பொருட்டு, புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த வல்லுனர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன். ஏற்கெனவே நான் உறுதி அளித்தவாறு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும்.

மாற்று இடம்
துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் உடன் கலந்துரையாடி விவசாய நிலம் மற்றும் குடியிருப்புகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில், புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. அந்த இடங்களில் தொழில் நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, புதிய விமான நிலையத்துக்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும்

மீனம்பாக்கம் விமான நிலையம்
சென்னை - மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து, அதன் வடமேற்கு பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 20 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்ட ‘டர்மினல் 5,’ ஐந்தாவது பயணிகள் முனையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல தற்போது நடைபெறும் ‘டர்மினல் 3’ கட்டுமான பணிகள் முடிவுற்ற பின்னர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் இருக்கும்.
விமானநிலைய மேம்பாடு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved