Also Watch
Read this
’கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாது,’ என உதயநிதி வேதனை தெரிவித்தார். ’வெற்றி வாய்ப்பை இழந்ததற்காக சேகர்பாபு மீது கோபம் அல்ல, வருத்தம் மட்டுமே,’ என விளக்கம் அளித்த உதயநிதி, யார் ஆளுங்கட்சி, யார் எதிர்க்கட்சி? என்பது தெரியாத அளவிற்கு சட்டசபை நிகழ்வுகள் மாறி விட்டதாகவும் விமர்சித்தார்.

நலத்திட்ட உதவி வழங்கும் விழா
இதுதொடர்பாக, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;
தேர்தல் தோல்விக்கு சினிமா மாயை, சமூக வலைதள கவர்ச்சி, திராவிட மாடல் திட்டங்கள் இளம் தலைமுறையினரைச் சென்றடையாதது எனப் பல காரணங்களைக் கூறலாம். சென்னை கிழக்கு மாவட்டத்தில் நாம் சந்தித்த பின்னடைவுக்காக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது எனக்குக் கோபம் இல்லை, வருத்தம் மட்டுமே. இது அவர் மீதும், இந்த மாவட்டத்தின் மீதும் எனக்கு இருக்கும் உரிமை ஆகும்.

இளம் தலைமுறையினர் மீது...
திமுகவின் சாதனைகளைப் பார்த்து அக்கட்சியை நோக்கி வரும் 'GenZ' இளம் தலைமுறையினரைக் குறிவைத்து,தற்போதைய தவெக அரசு தொடர்ந்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிராக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

மக்களோடு மக்களாக...
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றைக்கும் மக்களோடு மக்களாக நிற்பது திமுக. முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் துறைமுகம் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோம்.
மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவனத்தில் பயிற்சி முடித்த மகளிர், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநர் உள்ளிட்டோருக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினோம்.
தமிழகத்தை மீட்கும் பணியில்...
முத்தமிழறிஞர் கலைஞர் வளர்த்தெடுத்த தமிழ்நாட்டை, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது. முன்னோக்கிச் சென்ற தமிழ்நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லும் சர்க்கஸ் கூட்டத்தின் ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்தோம். கலைஞர் காட்டிய வழியில், தலைவர் தலைமையில் தமிழ்நாட்டை மீட்கும் பணியில் திமுக என்றும் முன் நிற்கும்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved