Also Watch
Read this

அரசியல் வீம்பிற்காக, தமிழகத்தின் வளர்ச்சியை முடக்கக் கூடாதென, தவெக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எதற்காக இந்த அவசர முடிவு?
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக தவெக அரசு அறிவித்திருப்பது, தமிழகத்தின் வளர்ச்சியை பின்னோக்கி இழுப்பதற்கான ஏற்பாடு என்று, நயினார் நாகேந்திரன் விமர்சித்து உள்ளார்.

பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்றாக எந்த இடத்தை தேர்வு செய்யப் போகிறோம் என்ற தெளிவின்றி, எதற்காக இந்த அவசர முடிவு? என கேள்வி எழுப்பியுள்ள நயினார் நாகேந்திரன், தவெக அரசுக்கு, பரந்தூரில் விமான நிலையம் அமைவது பிரச்சினையா? அல்லது தமிழகத்திற்கு புதிய விமான நிலையம் கிடைப்பதில் பிரச்சினையா? என வினவியுள்ளார்.

"வீ த லீடர்ஸ்" இயக்க தலைவர் அண்ணாமலை கேள்வி
புதிய விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்வதன் மூலம் ஏற்படும் "வாய்ப்புச் செலவை" மாநில அரசு கவனமாகப் பரிசீலிக்க வேண்டுமென "வீ த லீடர்ஸ்" இயக்கத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டாலும், சென்னைக்கான 2ஆவது விமான நிலையத்திற்கான புதிய இடத்தை அரசு உடனடியாக முன்மொழிந்திருக்க வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.

இடத்தை அடையாளம் காண்பதில் ஏற்பட்டுள்ள தாமதம், மாநிலத்தின் வளர்ச்சியை 10 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளியுள்ளதாக தெரிவித்துள்ள அண்ணாமலை, திட்டத்திற்காக ஏற்கனவே கையகப்படுத்திய நிலத்தை அரசு என்ன செய்யப் போகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved