Also Watch
Read this
சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். ஆழம் குறைவாக இருந்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அதிகாரிகளின் அலட்சியப் போக்கே இந்த மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மழைநீர் வடிகால் பணி
சென்னை, அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் கடையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்த 59 வயதான கலாவதி, கடந்த 23ஆம் தேதி இரவு பணி முடிந்து பேருந்து ஏறுவதற்காக அண்ணா நகர் 2ஆவது அவென்யூ வழியே நடந்து சென்றிருக்கிறார்.

அப்போது, பெய்த மழையால், பிரதான சாலையின் ஓரத்தில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளம் முழுவதும் தண்ணீர் நிரம்பி, எது சாலை, எது ஆபத்தான குழி? என்றே தெரியாத அளவுக்கு அபாயகரமாக கிடந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்த கலாவதி, தண்ணீருக்குள்ளேயே சுமார் 15 நிமிடங்கள் உயிருக்கு போராடி துடித்துள்ளார்.

விபத்தா? அலட்சியத்தால் நடந்ததா?
ஆனால், அங்கே தேங்கியிருந்த நீரில் மின்சாரம் பாய்ந்திருக்கலாம் என்ற அச்சத்தில், சுற்றியிருந்த பாதசாரிகளால் உடனடியாக நீரில் இறங்கி அவரை மீட்க முடியாமல் தவித்து போயுள்ளனர். தகவலறிந்து வந்த அண்ணா நகர் காவல்துறை, கலாவதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியபோதும், அவரது உயிர் பரிதாபமாக பிரிந்துவிட்டது.

ஆனால், இந்த மரணம் வெறும் விபத்து தானா? அல்லது அதிகாரிகளின் அலட்சியத்தால் நடந்ததா? என்பதுதான் இப்போது ஒட்டுமொத்த சென்னை நகரத்தையும் கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

ஆதாரங்களை மறைக்கும்...
’இது சாதாரண விபத்து அல்ல, மின்சாரம் தாக்கித் தான் என் தாய் உயிரிழந்தார்,’ என உடைந்த குரலில் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார் கலாவதியின் மகள் சங்கீதா. உயிரிழந்த கலாவதியின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்பதும், அவர் விழுந்த பள்ளத்திற்கு அடியில்தான் உயர் அழுத்த மின் வயர்கள் செல்கின்றன என்பதும் உறுதியாகி உள்ளன. சம்பவம் நடந்த கையோடு, அதிகாரிகள் அவசர அவசரமாக சம்பவ இடத்திற்கு வந்து தரைக்கு கீழ் செல்லும் மின் வயர்களை சீரமைக்கும் பணியிலும், பள்ளங்களை மூடி ஆதாரங்களை மறைக்கும் பணியிலும் ஈடுபட்டதாக குற்றம்சாட்டுகிறார் சங்கீதா.

சந்தேகத்திற்குரிய விபத்து மரணம்
ஆரம்பத்தில் மின்சாரம் பாய்ந்து தான் அம்மா இறந்தார் என்று கூறிய போலீசார், இப்போது தண்ணீரில் விழுந்து இறந்ததாக கதையை மாற்ற பார்க்கிறார்கள் எனவும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை தங்களிடம் காட்ட மறுப்பது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். தற்போது அண்ணா நகர் காவல்துறை தரப்பில் சந்தேகத்திற்குரிய விபத்து மரணம் என்ற பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கலாவதி கீழே விழுந்த பள்ளத்தில் மின் வயர்கள் செல்வது உண்மைதான் என்பதை ஒப்புக்கொள்ளும் காவல்துறை, முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாரா? அல்லது பள்ளத்தில் விழுந்ததால் தலையில் ஏற்பட்ட உள் காயத்தால் உயிரிழந்தாரா? என்பது முழுமையாக தெரியவரும் எனக் கூறி உள்ளது.

விழிப்புணர்வு தேவை
மழைக்காலம் வந்தாலே வடிகால் தோண்டுவதும், முறையான எச்சரிக்கை பலகைகளோ தடுப்பு சுவர்களோ இன்றி அதை அப்படியே திறந்தவெளியில் விட்டு செல்வதும் மாநகராட்சியின் தொடர்கதையாகிவிட்டது. எனவே, மழைக்கால பணிகள் நடக்கும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, தகுந்த பாதுகாப்பு தடுப்புகளையும், மின்சார தணிக்கையையும் மாநகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved