Also Watch
Read this
நாமக்கல் மாவட்டத்தில், விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் ராஜ வாய்க்காலில், ஒரு மாதத்தை கடந்தும் தண்ணீர் திறக்கப்படாததால் பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். காய்ந்து கருகும் பயிர்களை கண்டு கண்ணீர் வடிக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளை குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜேடர்பாளையம் முதல் மோகனூர் வரை
காவிரி தாய் வளம் கொழிக்கும் நாமக்கல் மண்ணில், இன்று விவசாயிகளின் கண்ணீரோடு சாக்கடை நீரும் கலந்து பாய்ந்து கொண்டிருக்கிறது. ஜேடர்பாளையம் முதல் மோகனூர் வரை பல ஏக்கர் நிலங்களின் ஜீவாதாரமான ராஜ வாய்க்கால் வறண்டு கிடப்பதால், கருகும் வாழ்வாதாரத்தை காப்பாற்ற சாக்கடை நீரையே பாய்ச்சுகிறார்கள் விவசாயிகள்.

30 நாட்களைக் கடந்தும்...
நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் தொடங்கும் இந்த ராஜ வாய்க்கால், பிலிக்கல்பாளையம், பாண்டமங்கலம், போத்தனூர் உள்ளிட்ட பல பகுதிகளை கடந்து சுமார் 16 ஆயிரத்து 300 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு உயிரூட்டி வருகிறது.

வாழை, வெற்றிலை, கோரை, கரும்பு, தென்னை, பாக்கு எனப் பலதரப்பட்ட பயிர்களுக்கும் இதுவே முதன்மை நீர் ஆதாரம். ஆண்டுக்கு 350 நாட்கள் வற்றாமல் ஓடும் இந்த வாய்க்காலில், வெறும் 15 நாட்கள் மட்டுமே பராமரிப்பு பணிக்காக நீர் நிறுத்தம் செய்யப்படும் என்பது வழக்கம். ஆனால், இந்த முறை 30 நாட்களை கடந்தும் ஒரு சொட்டு தண்ணீர் கூட திறக்கப்படாததால், பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

நீர்வளத்துறை அமைச்சர் வாக்குறுதி
வேறு வழியின்றி, வாய்க்காலில் தேங்கி நிற்கும் துர்நாற்றம் வீசும் சாக்கடை நீரை கொண்டு வெற்றிலை, தென்னை, கரும்பு பயிர்களுக்கு நீர் பாய்ச்சி வருகின்றனர் விவசாயிகள். இதனால், கொடூரமான நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க கதறுகிறார்கள். இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கவே ஆட்சியரிடமும், நீர்வளத்துறை அதிகாரிகளிடமும் விவசாயிகள் பலமுறை முறையிட்டும் தீர்வு எட்டப்படவில்லை.

தவெக ராசிபுரம் எம்எல்ஏ மற்றும் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏ சேகர் இதுகுறித்து குரலெழுப்ப, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் வாக்குறுதி அளித்தார்.

விவசாயிகள் ஆத்திரம்
ஆனால், பேச்சுவார்த்தை முடிந்த கையோடு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், வெற்றிலைப் பயிர் எதுவும் பாதிக்கப்படவில்லை, தவறான தகவல்களை பரப்பாதீர்கள் என கூறிவிட்டு நகர, கொதித்து போயிருக்கிறார்கள் விவசாயிகள். காய்ந்து கருகும் பயிர்களையும், சாக்கடை நீரை நம்பியிருக்கும் அவலத்தையும் கண்ணெதிரே வைத்தும் எதுவும் நடக்கவில்லை எனச் சாதிக்கும் அமைச்சரின் இந்தப் பேச்சு, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக உள்ளதாக விவசாயிகள் ஆத்திரம் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் எதிர்பார்ப்பு
நீர் வளத் துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து இந்த சிக்கலுக்கு உடனடித் தீர்வு காண்பதன் மூலம் மட்டுமே விவசாயிகளின் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். எனவே, ராஜ வாய்க்காலில் விரைந்து தண்ணீர் திறந்து, நாமக்கல் விவசாய நிலங்கள் மீண்டும் காவிரியின் நீரால் நிரம்பி செழிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved