Also Watch
Read this

பல தசாப்தங்களாக முறையான சாலை வசதியோ, போக்குவரத்து சாதனங்களோ இன்றி அடிப்படை உரிமைகளுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் போராடி வந்த திண்டுக்கல் மாவட்டம், அசன் கொடை மலை கிராமத்தின் இருண்ட காலத்தை முதல்வர் விஜயின் ஒற்றைப் பயணம் முற்றிலுமாக தகர்த்தெறிந்து உள்ளது.

தங்களின் நீண்ட நாள் கனவு நனவானதால் முதலமைச்சர் விஜய்க்கு, அப்பகுதி மக்கள் ஆனந்தக் கண்ணீருடன் நன்றியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

மலை கிராமத்தில்...
பல தலைமுறைகளாக இருளில் தவித்த மலை கிராமம், இன்றைக்கு ஊடகங்களின் கவனம் பெறக் காரணம் விஜய் வருகை தான். அவர் கால் பதித்த அந்த ஒற்றை நிகழ்வால் தான் தங்களின் கிராமம் உலக அளவில் ட்ரெண்டானதாக அப்பகுதி மக்கள் ஆனந்த கண்ணீருடன் நெகிழ்கிறார்கள்.

திரைப்படத்தில் பார்த்த அத்திபட்டி போல, வரைபடத்திலேயே இல்லாதவாறு ஒதுக்கப்பட்ட கிராமம் தான், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலையில் உள்ள அசன் கொடை கிராமம். 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த மலை கிராமத்தில், விவசாயம்தான் பிரதான தொழில். கரடுமுரடான மலைப்பாதையை கடந்து செல்ல ஒரே ஒரு ஜீப் போக்குவரத்து மட்டும்தான் வாழ்வாதாரம். அவசர மருத்துவ உதவிக்கோ, விளை பொருட்களை ஏற்றி செல்லவோ இந்த ஜீப் வாகனத்தை மலை மக்கள் முழுமையாக நம்பியிருக்கின்றனர்.

அடிப்படை வசதிகள் இல்லை...
சாலை வசதி இல்லாத இந்த ஒரு காரணமே, இந்த கிராமத்து இளைஞர்களின் வாழ்க்கையிலும் பெரிய இடியை இறக்கியது. முறையான பாதையும், போக்குவரத்து வசதியும் இல்லாத ஊருக்குப் பெண் கொடுக்க வெளியூர் மக்கள் மறுத்து விட்டனர்.

இதனால், திருமணமே ஆகாமல் பல இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. தங்களின் கிராமம் உலக தொடர்பே இல்லாமல் அத்திபட்டி போல முடங்கிப் போய்விட்டதே என அந்த விளிம்புநிலை மக்கள் பல ஆண்டுகளாக கண்ணீரில் தத்தளித்து வந்தனர். அரசாங்கம் வழங்கும் இலவச ரேஷன் அரிசியை கூட, மலை ஏற்றி கிராமத்திற்குள் கொண்டு வர 3 ஆயிரம் ரூபாய் வரை வாடகை கொடுக்க வேண்டிய கொடுமை இங்கு நீண்ட காலமாக அரங்கேறி வந்தது.

ஜனநாயகன் படப்பிடிப்பு...
இந்த காரிருளில் தான், அந்த மக்களின் வாழ்வில் ஒரு மின்னலாய் நிகழ்ந்தது அந்த சம்பவம். கடந்த ஆண்டு, முதல்வர் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த அசன் கொடை வனப்பகுதியில் நடைபெற்றது.

படப்பிடிப்பின் போது, எந்தவித பந்தாவும் இல்லாமல் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அந்த கரடுமுரடான பாதையிலேயே நடந்தே சென்றார் விஜய்.

அப்போது, வழியில் நின்ற மக்கள் அவரை சந்தித்து, தங்களின் 3 தலைமுறைப் போராட்டத்தை கண்ணீரோடு விவரித்தனர்.

’நீங்க ஆட்சிக்கு வந்த பிறகு, எங்க ஊருக்கு முறையான சாலை வசதி செஞ்சு தரணும்,’ என மக்கள் உருக்கமாக கோரிக்கை வைத்தபோது,


அதை இன்முகத்தோடு கேட்டுக்கொண்ட விஜய், ஆட்சி அமைந்ததும் நிச்சயம் சாலை வரும் எனப் புன்னகையோடு உறுதியளித்து சென்றார்.

மலை கிராமத்திற்கு சாலை வசதி
தேர்தல் நேரத்தில் கொடுக்கப்படும் வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்படுவது தான் தமிழக அரசியல் வரலாறு. ஆனால், அந்த எழுதப்படாத விதியை சுக்குநூறாக உடைத்தெறிந்திருக்கிறது முதலமைச்சர் விஜய்யின் ஆக்சன். கடந்த வாரம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆனந்த், ஆட்சிப் பொறுப்பேற்ற ஐந்தாவது நாளிலேயே, அசன் கொடை கிராம மக்கள் தன்னிடம் வைத்த கோரிக்கையை நினைவுகூர்ந்த முதலமைச்சர் விஜய், அந்த மலைகிராமத்திற்கு புதிய சாலை அமைக்க உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க உத்தரவிட்டார் எனப் பெருமிதத்தோடு அறிவித்தார்.

அசன் கொடை கிராமத்திற்கு விடிவெள்ளி
படப்பிடிப்புக்காக சொகுசு காரில் இறங்கிய விஜயை, அசன் கொடை மக்களின் 3 தலைமுறை துயரம் சுக்குநூறாக உடைத்துப்போட்டது. ஷூட்டிங் முடிந்து திரும்பும்போது காரில் ஏற மறுத்து, அடர்ந்த காட்டுப் பாதையில் 1 மணி நேரம் தனி ஆளாக நடந்து சென்றவர், வழியெங்கும் அந்த மக்களின் கண்ணீரையும், திருமணமாகாத இளைஞர்களின் நெஞ்சை பிளக்கும் வேதனையையும் தன் மனதிற்குள் கடத்திக்கொண்டார்.

சொகுசு காரில் சென்ற நடிகன், சாமானியர்களின் வலியை சுமந்துகொண்டு ஒரு மணி நேரம் நடந்து மக்களுக்கான தலைவனாக உருமாறிய அந்த வரலாற்று தருணம் தான், ஆட்சிக்கு வந்த ஐந்தே நாட்களில் அந்த ஊருக்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கி, அத்திபட்டியாக கிடந்த அசன் கொடை கிராமத்திற்கு புதிய விடிவெள்ளியை கொண்டுவந்திருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved