Also Watch
Read this
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (DRDO) உருவாக்கப்படும் அனைத்து ஏவுகணை அமைப்புகளின் தொழில்நுட்பங்களையும் உள்நாட்டு உற்பத்திக்காக இந்திய தொழில் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் நோக்கம் என்ன? எந்தெந்த ஏவுகணை தொழில்நுட்பங்கள் தனியார் உற்பத்திக்கு தாரை வார்க்கப்பட உள்ளன? எந்தெந்த நிறுவனங்கள் இதற்காக போட்டி போடுகின்றன?
பாதுகாப்புத் துறையில் விரிவடையும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு
ஏவுகணை தொழில்நுட்பங்களை உள்நாட்டு உற்பத்திக்காக இந்தியத் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் என்ற அடிப்படையில், தனியாருக்கு மாற்றிவிடும் திட்டத்திற்குப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

வான் பாதுகாப்பு ஏவுகணைகள், வானில் இருந்து பாய்ந்து வானில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகள் போர்க்களத் தாக்குதல் ஏவுகணைகள் இதில் அடங்கும். இதன் மூலம் நாட்டின் ஏவுகணை தயாரிப்பு தனியார் உற்பத்தியாளர்களுக்குத் திறந்து விடப்பட்டுள்ளது. நிறுவனங்கள் அவற்றின் தகுதி, சான்றிதழ்கள் மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளின்படி இந்த ஏவுகணைகளைத் தயாரிக்க முடியும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் வடிவமைப்புச் சான்றிதழ் மற்றும் தர உத்தரவாதத்திற்கான பொறுப்பை DRDO தொடர்ந்து தன்வசமே வைத்திருக்கும். பாதுகாப்புத் துறையில் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை விரிவுபடுத்துவதில் இதையொரு "முக்கிய மைல்கல்" என்று பாதுகாப்பு அமைச்சகம் வர்ணித்துள்ளது. இந்த முயற்சியானது செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதையும், இறக்குமதிச் சார்பைக் குறைப்பதையும் மற்றும் உள்நாட்டு மதிப்பு கூட்டலை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொது மற்றும் தனியார் நிறுவனங்களை...
மத்திய அரசின் முன்னெடுப்பு, பாரம்பரிய ஏவுகணை தயாரிப்பு முறையிலிருந்து ஒரு முக்கியமான திசை விலகலையும் பெரிய மாற்றத்தையும் குறிக்கிறது. இதற்கு முன்பு, DRDO ஒரு ஏவுகணையை உருவாக்கி, பயனர் சோதனைகளை முடித்த பிறகு, பெருவீத அளவில் தயாரிக்க பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் லிமிடெட், BDLக்குஅனுமதி வழங்கும். இதன் பிறகு, Development-cum-Production (DcPP) அடிப்படையில், ஏவுகணையை திட்டமிட்டு வடிவமைக்கும் நிலையிலேயே பொது மற்றும் தனியார் நிறுவனங்களை இணைத்துக் கொண்டது. அந்த வகையில், evelopment-cum-Production கூட்டாளிகளாக அதானி டிஃபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ், பாரத் ஃபோர்ஜ், ஐகாம் டெலி மற்றும் சோலார் டிஃபென்ஸ் நிறுவனங்கள் உள்ளன. சுமார் 10 முதல் 12 ஏவுகணைத் திட்டங்கள் பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூட்டு Development-cum-Production வகையை சேர்ந்தது.

ஐதராபாத்தில்...
அதானி டிஃபென்ஸ் நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள தனது ஆலையில் தயாரிக்கப்படவுள்ள ஹைப்பர்சோனிக் ருத்ரம்-II உட்பட ருத்ரம் மற்றும் Naval Anti-Ship Missile–Short Range ஆகியவற்றிற்கான Development-cum-Production Partner கூட்டாளியாகச் செயல்படுகிறது. பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்துடன் இணைந்து, 1,000 கிலோ எடையுள்ள கௌரவ் (Gaurav) நீண்ட தூர கிளைடு குண்டு மற்றும் தாரா (TARA) கிளைடு கிட் ஆகியவற்றிற்கான கூட்டாளியாகவும் உள்ளது. அதானி நிறுவனம் கடந்த மாதம் மத்தியப் பிரதேசத்தின் சிவபுரியில் ஒரு ஏவுகணை வளாகத்திற்கான பணியைத் தொடங்கியுள்ளது, அங்கு நவீன ஏவுகணை மோட்டார்களுக்கான திட எரிபொருள் (composite-propellant) மற்றும் வெடிபொருளான டிஎன்டி (TNT) உற்பத்திக்கு திட்டமிட்டுள்ளது.

எந்தெந்த ஏவுகணைகள்? எந்தெந்த நிறுவனங்கள்?
தற்போது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) உருவாக்கும் அனைத்து ஏவுகணைகளின் தொழில்நுட்பங்களும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகின்றன. இந்த முடிவின் கீழ் வரும் குறிப்பிட்ட ஏவுகணை அமைப்புகள் எவை என்பதை அமைச்சகம் தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆகாஷ் (Akash) மற்றும் ஆகாஷ்-என்ஜி (Akash-NG) தரையிலிருந்து வான்நோக்கிப் பாயும் அமைப்புகள், விஎஸ்ஹோராட்ஸ் (VSHORADS), அஸ்திரா (Astra) வான்வழி ஏவுகணைகள், ருத்ரம் (Rudram) ஏவுகணைகள், நாக் (Nag), சாண்ட் (SANT) மற்றும் வீரர்கள் ஏந்திச் செல்லக்கூடிய ஏடிஜிஎம் (ATGM) போன்ற டேங்க் எதிர்ப்பு அமைப்புகள், என்ஏஎஸ்எம்-எஸ்ஆர் (NASM-SR) கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், உள்நாட்டு தரைவழித் தாக்குதல் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் பிரளய் (Pralay) ஏவுகணைகள் ஆகியவை அடங்கும் என பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

200+ கிமீ தூரம் பாயும் திறன் கொண்ட அஸ்திரா எம்கே-2 (Astra Mk-2), தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் முதல் பெரிய அமைப்புகளில் ஒன்றாக இருக்கும் எனத் தெரிகிறது. அதானி, பாரத் ஃபோர்ஜ், டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் இதற்குப் போட்டியிடுகின்றன.

பாதுகாப்புத் துறையில் தனியார்மயம்
அதேசமயம், வியூக முக்கியத்துவம் வாய்ந்த (Strategic) ஏவுகணைகள் ஒரு தனிப் பிரிவாகும், அவை தொடர்ந்து தனியாகவே கையாளப்படும், தனியாருக்கு தாரை வார்க்கப்படும் தொழில்நுட்பங்களில் வராது. எனவே, அக்னி (Agni) மற்றும் கே-வரிசை (K-series) ஏவுகணைகள் இந்த தொழில்நுட்ப மாற்றத்தில் சேர்க்கப்படவில்லை. இதேபோல், பிரம்மோஸ் (BrahMos) மற்றும் எம்ஆர்எஸ்ஏஎம் (MRSAM) ஆகிய ஏவுகணைகள் வெளிநாட்டு கூட்டாளிகள் தொடர்புள்ளதால், அவை தனி உடன்படிக்கைகளின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

லட்சுமண ரேகையை தாண்டக்கூடாது
ஏற்கெனவே விண்வெளித் துறையில் ஏவூர்தி தொழில்நுட்பங்களில் தனியார் ஈடுபடும் நிலையில், தற்போது பாதுகாப்புத்துறையில் ஏவுகணை தொழில்நுட்பங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகின்றன. மேலைநாடுகள் நடைபோடும் அதே பாதையில் இந்தியா செல்வது, உள்நாட்டு உற்பத்தியை விரைவுபடுத்துவதற்கும் அதிகப்படுத்துவதற்கும் உதவும். எனவே உள்நாட்டு உற்பத்திக்காக இந்திய தொழில்நிறுவனங்களுக்கு மட்டுமே ஏவுகணை தொழில்நுட்பங்களை வழங்குவது என்ற லட்சுமண ரேகையை மத்திய அரசு ஒருபோதும் தாண்டக்கூடாது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved