Also Watch
Read this
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து, அது சரியா? தவறா? என்ற விவாதங்கள் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் அனலைக் கிளப்பியுள்ளன.

முதல்வருக்கு நன்றி
அரசின் அறிவிப்புக்கு பரந்தூர் பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளதோடு, முதல்வரை நேரில் சந்தித்து நன்றியும் தெரிவித்து உள்ளனர். ஆனால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என தி.மு.க விமர்சித்து உள்ளது.

3 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த பரந்தூர் திட்டம்
காஞ்சிபுரத்தில் உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் கடந்த 2023ஆம் ஆண்டு அப்போதைய தி.மு.க. அரசு முனைப்பு காட்டியது. புதிய விமான நிலையப் பணிகளுக்கு 5,746 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின. நிலத்தை ஒப்படைக்கும் மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு 1,822 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பரந்தூரில் ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, தண்டலம் உள்பட 13 கிராமங்களில் இருந்து நிலத்தைக் கையகப்படுத்தி விமான நிலையமும் அணுகுசாலைகளும் அமைக்கப்பட உள்ளதாக, அப்போதைய திமுக அரசு அறிவித்தது. பரந்தூரில் சர்வதேச பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்காக 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி கொள்கை ரீதியான ஒப்புதலை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துக்கு மத்திய அரசு வழங்கியது.

தொடர் போராட்டத்தில் ஏகனாபுரம்
ஆனால், புதிய விமான நிலையத் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். சுமார் ஆயிரம் நாட்களைக் கடந்து அவர்களின் போராட்டம் நீடித்தது. இந்தக் கிராமத்தில் 920 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த அரசு திட்டமிட்டது. கிராம மக்களின் எதிர்ப்பு காரணமாக ஏகனாபுரத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளால் நிலங்களைக் கையகப்படுத்த முடியவில்லை. அதேநேரம், நெல்வாய், நாகப்பட்டு உள்பட சில கிராமங்களில் அரசின் விமான நிலையத் திட்டத்துக்கு ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலங்களைக் கொடுத்தனர். இருப்பினும் பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுத்து நிலங்களைக் கையகப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய விஜய்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 110ஆவது விதியின்கீழ் பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் திங்கட்கிழமை அறிவித்தார். சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக உள்ளது. தற்போது நடைபெற்று வரும் 'டெர்மினல் 3' முனையம் முடிந்த பிறகு ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளைக் கையாளக் கூடியதாக இருக்கும். கூடுதலாக 2 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் 'டெர்மினல் 5' என்ற புதிய முனையம் அமைக்கப்படும்.

புதிய விமான நிலையம்
அதேசமயம் வளர்ந்து வரும் சென்னை மாநகரத்தின் தேவைகள், பயணிகளின் வசதிகள், சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கு தேவைப்படும் இடம் விவசாயிகளை பாதிக்காத வகையிலும் குடியிருப்புகளை அகற்றாத வகையிலும் அமைய வேண்டும். விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்களில் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக் கூறுகளை சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொண்டு புதிய விமான நிலையத்துக்கான இடம் இறுதி செய்யப்படும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும் - திமுக
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் புதிய விமான நிலையம் முக்கியமான ஒன்று. பரந்தூரை தேர்வு செய்வதற்கு முன்னதாக பல இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. தொழில் நுட்ப ரீதியான பிரச்னைகளை ஆய்வு செய்த பிறகே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. விமான நிலையம் வந்தால் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் தொழில் வளர்ச்சியைப் பெறும் வாய்ப்பு உருவாகும். பரந்தூரில் விமான நிலையம் அமையவிருந்த 5,746 ஏக்கரில் 90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விட்டன.

பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும். மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல, பெருத்த ஏமாற்றம். தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குவதற்கு முன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக நின்றுவிடும். பரந்தூரில் விமான நிலையம் அமைவதுதான் சரியானதாக இருக்கும். அரசியல் காரணங்களுக்காக திட்டத்தை கைவிடுவதாக அரசு அறிவித்துள்ளது என்பது, திமுக தரப்பு வாதம்.

இது தான் எதிர்பார்ப்பு...
இதனிடையே, 90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுவது உண்மை அல்ல என்றும், சுமார் 1,300 ஏக்கர் வரை நிலங்கள் மட்டுமே பரந்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் கையகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பரந்தூர் திட்டத்திற்கு முழுமையான சுற்றுச்சூழல் அனுமதியும் வழங்கப்படவில்லை. இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் தேவை என்பதை ஆளும் தரப்பு, எதிர்க்கட்சிகள், பொருளாதார வல்லுநர்கள், தொழில் துறையினர், பொதுமக்கள் என யாரும் மறுக்கவில்லை. எல்லோரும் ஒன்றுபடும் இந்த புள்ளியில் இருந்து புதிய இடத்தில் புதிய விமான நிலையத்தை கட்டும் பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved