Also Watch
Read this
நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கிய மனித உயிர்களை மீட்க உலகம் முழுவதும் இருந்து உதவிக் கரங்கள் நீள்கின்றன. ஆனால், உங்கள் அன்புக்கும் உதவிக்கும் நன்றி. நிவாரணப் பொருட்கள் மட்டும் போதும், மீட்புக் குழுக்கள் வேண்டாம் என்று 17 நாடுகளின் கோரிக்கையை நேபாள அரசு நிராகரித்து விட்டது. நேபாள அரசின் இந்த மறுப்புக்கு காரணம் என்ன?

நேபாளத்தில் இருந்து...
திடீர் பேரழிவு, மலை கிராமங்களை சுருட்டி போட்ட வெள்ளப்பெருக்கு. நூற்றுக்கணக்கான மனிதர்கள் காணாமல் போன அதிர்ச்சி என நேபாளத்தில் மண்சரிவும், வெள்ளமும் ஏற்படுத்திய வடு இன்னும் ஆறாத நிலையில், மீட்புப் பணிகள் அங்கே ராணுவ மட்டத்தில் படுவேகமாக நடந்து வருகின்றன. ஆனால், இந்த அவசர காலத்திலும் உலக நாடுகளை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது நேபாள அரசின் அந்த ஒற்றை முடிவு.

மீட்பு படைக்கு அனுமதி மறுப்பு
’நாங்க வர்றோம், எங்க மீட்புப் படைகளை அனுப்புறோம்,’ என இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், தென் கொரியா, ஐப்பான் உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட நாடுகள் வலிய சென்று உதவிக்கரங்களை நீட்டின. குறிப்பாக, இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படையான NDRF Teams எந்த நேரத்திலும் விமானத்தில் பறக்க தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. அதோடு, எங்கள் நாட்டு ஆட்களையும் மீட்டு தருகிறோம் என இந்திய அரசு கேட்டுக்கொண்டது. ஆனால், நேபாள அரசு கட் அண்ட் ரைட்டாக, ‘ரொம்ப நன்றி, ஆனா ஆட்களை அனுப்ப வேண்டாம்,’ என்று சொல்லி கதவை மூடாத குறையாக மறுத்துவிட்டது.

தென்கொரியா விடாப்பிடி...
நேபாளம் மறுத்தாலும், தென் கொரியா மட்டும் லேசில் விடுவதாக இல்லை. காரணம், அந்த நாட்டின் நீர்மின் நிலைய ஊழியர்கள் உட்பட பலர் இந்த வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர். ’நாங்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துறோம், கண்டிப்பா எங்க மீட்புக் குழுவை நேபாளத்துக்குள்ள அனுப்ப அனுமதி கேட்போம்,’ என தென் கொரிய வெளியுறவுத்துறை அடம் பிடித்து கொண்டிருக்கிறது. இருந்தாலும், நேபாள அரசு இன்னும் மசியவில்லை.

2015ல் களேபரம்
’வெள்ளத்துல ஆட்கள் சிக்கியிருக்காங்க, அப்புறம் ஏன் வெளிநாட்டு மீட்புக் குழுக்களை வேணாம்னு சொல்றாங்க?,’ இந்த கேள்வி உலகளவில் எழுந்ததும், பின்னணியில் இருக்கும் ட்விஸ்ட் வெளியே வந்தது. நேபாளத்தில் கடந்த 2015ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது, சுமார் 9 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இடுபாடுகளில் மாட்டிக்கொண்டனர். இதனால், உலகம் முழுவதிலும் இருந்து 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மீட்புக் குழுக்கள் ஒரே நேரத்தில் நேபாளத்தில் குவிந்தன. அப்போது, மொழிப் பிரச்சனை, அதிகாரப்பூர்வ தகவல்கள் பரிமாறுவதில் குழப்பம், யார் எங்கே போவது? என்ற போட்டி என பெரிய களேபரம் உருவானது.

பாதுகாப்பு மற்றும் அரசியல்
’அந்த தவறை மீண்டும் செய்யக்கூடாது,’ என்பதில் நேபாள அரசு பிடிவாதமாக இருக்கின்றது. ’எங்கள் நாட்டு ராணுவமும், காவல்துறையுமே மீட்புப் பணியை சமாளித்து கொள்ளும், நாங்களே பார்த்துக்கொள்கிறோம்,’ என தெரிவித்துள்ளது. கூடுதலாக, திபெத் எல்லைக்கு அருகில் வெள்ளம் பாதித்த பகுதிகள் அமைந்திருப்பதால், பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் உணர்வுகளும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

’பணம், பொருட்கள் ஓகே ஆட்கள் நோ’
ஆட்களை அனுப்ப முடியாவிட்டாலும், இந்தியா தனது அண்டை நாட்டு கடமையை நிறுத்தவில்லை. ’பொருட்களை கொடுங்கள், மனிதவளத்தை அனுப்பாதீர்கள்,’ என்பதுதான் நேபாளத்தின் கொள்கை.

அதனால், இந்தியா அனுப்பும் உணவு தானியங்கள், மருந்துகள், கூடாரங்கள் மற்றும் அவசரகால நிவாரணப் பொருட்களை மட்டும் நேபாள அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. வெளிநாட்டினர் அத்தனை பேரையும் எல்லைக்கே கோடு கிழித்து நிறுத்தியிருக்கும் நேபாளம், ’பணம், பொருட்கள் ஓகே ஆட்கள் நோ,’ என்பதில் மிக தெளிவாக இருக்கிறது.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக மதியழகன்...
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved