Also Watch
Read this
சேலம் ஆவினில் அதிர்ச்சி சம்பவம். ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் டப்பாக்களை பதுக்கி வைத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்.
அதிகாரியின் அறையில் இருந்து சுமார் 40 லிட்டர் நெய் பறிமுதல்.
பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ வெளியான நிலையில், ஆவின் துணைப் பொது மேலாளர் அதிரடி சஸ்பெண்ட். அதிரவைக்கும் ஆவின் நெய் முறைகேட்டில் வேறு அதிகாரிகளுக்கும் தொடர்பா? என தீவிர விசாரணை.

வெளிச்சந்தையில் விற்பனை
சேலம் தளவாய்ப்பட்டியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையில் தான் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ தான் பேசுபொருளாகி உள்ளது.
சேலம், ஆவினில் துணைப் பொது மேலாளராக பணியாற்றி வந்த சாரதா மீது, ஆவின் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் நெய் மற்றும் வெண்ணெய் டப்பாக்களை சில ஊழியர்களின் உதவியுடன் பதுக்கி வைத்து, வெளிச்சந்தையில் விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது.
இந்த புகார் தொடர்பாக அதிகாரிகள், சாரதாவின் அறையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவரது மேஜை டிராயரில் சுமார் 40 லிட்டர் நெய் டப்பாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சமூக வலைதளங்களில்
இந்த விவகாரம் உயரதிகாரிகளின் கரிசணையோடு மூடி மறைக்க முயன்றபோதும், துணை மேலாளரின் அறையில் இருந்து நெய் பாட்டில்கள் வெளியே எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாரதா பணியிடை நீக்கம்
வீடியோ தொடர்பாக, விசாரணை நடைபெற்று வந்த நிலையில், முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளான துணை பொது மேலாளர் சாரதாவை பணியிடை நீக்கம் செய்து, பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு மேலாண்மை இயக்குநர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், நெய் மற்றும் வெண்ணெய் முறைகேட்டில் வேறு அதிகாரிகள் அல்லது ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா? ஆவின் நிறுவனத்தில் இதுபோன்ற முறைகேடு தொடர்ந்து நடைபெற்றதா? என்ற பல்வேறு கோணங்களிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆவின் அதிகாரியே முறைகேடு புகாரில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது, சேலம் ஆவின் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved