Also Watch
Read this
நேபாளத்தை சீர்குலைத்த பெருவெள்ளத்தின் பின்னணியில், சீனா ஏதோ ஒரு மர்ம ரகசியத்தை மறைப்பதாக பூதாகரமான சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. அருணாச்சலப் பிரதேச எல்லைக்கு அருகே சீனா கட்டி வரும் பிரம்மாண்ட அணை நாளை இந்தியாவிற்கும் இதேபோன்ற பேராபத்தை கொண்டு வருமோ? என்ற அச்சம் உருவெடுத்திருக்கிறது. கடந்த 1975ல் ஒரே இரவில் பல அணைகள் உடைந்து லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் மாண்டுபோனதை மறைத்த சீனாவின் அதிர்ச்சி வரலாறு குறித்து விரிவாக பார்க்கலாம்.

பாங்கியாவோ எனும் பிரம்மாண்ட அணை
ஒரே இரவில் 62 அணைகள் அடுத்தடுத்து உடைந்து நொறுங்கி, 2 லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்கள் நீரில் மூழ்கி பலியான பேரழிவை, சீனா உலகிற்கு தெரியாமல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மூடி மறைத்த வரலாற்றை கேட்டால் எவரும் அதிர்ந்து போவார்கள்.

1950களில் மாவோ சேதுங்(Mao Zedong)தலைமையிலான சீனா, இயற்கையை வெல்லப்போகிறோம் என்ற வீண் இறுமாப்பில் களமிறங்கியது. ஹெனான் மாகாணத்தில் பாங்கியாவோ எனும் பிரம்மாண்ட அணையை சோவியத் பொறியாளர்களின் துணையோடு கட்டியதோடு, இது என்றும் உடையாத இரும்பு அணை என்று சீனா மார்தட்டிக்கொண்டது.

ஆனால், அப்போதே மூத்த பொறியாளர் சென் சிங், ’அணையில் தண்ணீரை தேக்குகிறீர்கள், ஆனால், உபரிநீர் வெளியேற முறையான வடிகால் வசதிகள் இல்லை, இது பேரழிவில் முடியும்,’ என்று எச்சரித்தார். சீனாவோ, அவருக்கு வலதுசாரி முத்திரை குத்தி, அவரது எச்சரிக்கையை புறந்தள்ளி பெட்டிக்குள் பூட்டி வைத்தது.

அதிகாரிகளின் அலட்சியத்தால்...
1978 ஆகஸ்ட் மாதம், நீனா சூறாவளி உருவானது. ஒரு முழு ஆண்டிற்கு பெய்ய வேண்டிய மழை ஹெனான் மாகாணத்தில் வெறும் 3 நாட்களில் கொட்டி தீர்க்க, அணைக்குள் விநாடிக்கு 13 ஆயிரம் கனமீட்டர் தண்ணீர் பாய்ந்தது. ஆனால், மதகுகளால் விநாடிக்கு வெறும் ஆயிரத்து 700 கனமீட்டர் தண்ணீரை மட்டுமே வெளியேற்ற முடிந்தது. உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முயன்றபோது தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. முடிவெடுக்க இயலாத அதிகாரிகளின் அலட்சியத்தால் அணை நிரம்பி வழிந்திருக்கிறது.

ஒரே இரவில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்...
ஆகஸ்ட் 8ஆம் தேதி, நள்ளிரவு 12 மணியளவில், வானமே பிளந்து பூமியே வெடிப்பது போன்ற பயங்கர சப்தம் கேட்க, 24 மீட்டர் உயரமுள்ள அந்த இரும்பு அணை தவிடுபொடியானது. அணையிலிருந்து விநாடிக்கு 30 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில், 10 கிலோமீட்டர் அகலத்திற்கு பேரலை போல நீர் வீறிட்டு பாய்ந்தது. உறங்கி கொண்டிருந்த கிராமங்கள், நகரங்கள், மனித உயிர்கள் என எதுவும் மிஞ்சவில்லை. பாங்கியாவோ உடைந்த அதிர்விலேயே, அதை சுற்றியிருந்த 61 சிறிய மற்றும் பெரிய அணைகள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன. ஒரே இரவில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தண்ணீருக்குள் மூழ்கி துடிதுடித்து உயிரிழந்தனர்.

மொத்த பலி 2.30 லட்சம்
இத்துடன் அப்பேரழிவு முடியவில்லை, சாலைகள், ரயில் பாதைகள் அடித்து செல்லப்பட்டு, 1 கோடி மக்கள் வீடிழந்தனர். துண்டிக்கப்பட்ட கிராமங்களில் பல வாரங்களாக மக்கள் மரக்கிளைகளை பிடித்துக்கொண்டு உணவின்றி இலை, தழைகளை தின்று உயிர் பிழைக்க போராடினர். சுற்றிலும் தேங்கி நின்ற அழுகிய உடல்கள், குடிநீர் தட்டுப்பாடு, பஞ்சம், நோய்களால் அடுத்த சில வாரங்களில் மேலும், 1 லட்சத்திற்கும் அதிகமானோர் செத்து மடிந்தனர். மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை தொட்டதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

பேரழிவின் உண்மையான முகமூடி
இவ்வளவு பெரிய கொடுமைகள் நடந்தும் சீனா, அரசு ஊடகங்களை முற்றிலுமாக தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து, இந்த செய்தியை உலகிற்கு வராமல் மறைத்தது. பஞ்சம் வந்ததையும், அணை உடைந்ததையும் மறைத்து நிவாரணம் வழங்குகிறோம் என்ற போலியான பிரச்சாரத்தை மட்டுமே வெளியிட்டது.

அரசின் கட்டுப்பாட்டை மீறி, சீனாவை சேர்ந்த 8 மூத்த பொறியாளர்கள் திரட்டிய ஆதாரங்களும், 1995ல் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வெளியிட்ட புலனாய்வு அறிக்கையும்தான் மூடிமறைக்கப்பட்ட இந்த பேரழிவை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டின. இதன் பிறகே, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை கடந்து, 1990களில் தான் இந்த பேரழிவின் உண்மையான முகமூடி கிழிக்கப்பட்டிருக்கிறது.

வல்லுநர்கள் எச்சரிக்கை
இன்று நேபாள எல்லையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு பல கிராமங்கள் அழிந்ததோடு, சுமார் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், சீனா எந்தவொரு முன்அறிவிப்பும் வழங்காமல் தற்போது வரை மௌனம் காக்கிறது. இதுமட்டுமின்றி, அருணாச்சலப் பிரதேச எல்லைக்கு அருகில் மேடாக் பகுதியில் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க சீனா கட்டி வரும் பிரம்மாண்ட அணை, இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved