Also Watch
Read this
ஆகஸ்ட் 26 காலை, நேபாளத்தில் உள்ள, போட்டேகோசி, திரிசூலி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியது. கிராமங்கள், சாலைகள், பாலங்கள், நீர்மின் நிலையங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த வெள்ளத்தினால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். நிலநடுக்கம்தான் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்கு காரணமா? வெள்ளப்பெருக்கிற்கு காரணமான பனிப்பாறையின் பிரம்மாண்டம் என்ன? இந்த பேரழிவு நமக்கு உணர்த்தும் பாடம் என்ன?

நிலநடுக்கமே காரணம் என அறிவிக்கப்பட்டது ஏன்?
காலநிலை அமைப்பில் பனி, பனிக்கட்டிகள் மற்றும் பனிப்பாறைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் பனிப்பாறைகள் உருகுவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 2026ஆம் ஆண்டை பனிப்பாறைகள் பாதுகாப்புக்கான சர்வதேச ஆண்டாக ஐநா அறிவித்திருந்தது. ஆனால் பனிப்பாறை நேபாளத்தில் ஏற்படுத்தியுள்ள பேரழிவு 2026ஆம் ஆண்டின் ஆறாத வடுவாக மாறிவிட்டது.

வேகமாக உருகும் பனி, வெப்பமயமாதல்
இமயமலையில் பனி உருகும் வேகம் 2000ஆம் ஆண்டிலிருந்து இரட்டிப்பாகி உள்ளது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உலக வெப்பமயமாதலால் வேகமாகப் பனிப்பாறைகள் தொடர்ந்து உருகுவதால், கடந்த இருபது ஆண்டுகளில் புதிய பனிமலை ஏரிகளின் எண்ணிக்கையும் அளவும் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
"பனிமலை ஏரிகளின் சீற்றத்தால் ஏற்படும் வெள்ளம்" (glacial lake outburst flood) என்பது இமயமலைத் தொடர் முழுவதும் பரவியுள்ள ஒரு பொதுவான இயற்கை நிகழ்வு. இந்தியாவில் லடாக், இமாசலப் பிரதேசம், சிக்கிம், உத்தரகாண்ட், நேபாளம், பூட்டான், பாகிஸ்தான் மற்றும் திபெத் உள்ளிட்ட சீனாவின் மேற்குப் பகுதிகளில் "பனிமலை ஏரிகளின் சீற்றத்தால் ஏற்படும் வெள்ளம்" தொடர்ந்து நிகழ்ந்துவருகிறது.

நில நடுக்கம் ஏற்படவில்லை
தொடக்கத்தில், ஆகஸ்ட் 26 அன்று உள்ளூர் நேரப்படி காலை 8:37 மணிக்கு ஏற்பட்ட 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமே பனிச்சரிவுக்கு காரணம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) விஞ்ஞானிகள் கருதினர். ஆனால், ஒரு நாள் கழித்து, கூடுதல் நில அதிர்வு கண்காணிப்பு நிலையங்களின் தரவுகளை ஆராய்ந்து, செயற்கைக்கோள் படங்களை மறுஆய்வு செய்த பின்னர், ’இமயமலையில் நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை,’ என்று புவியியல் அமைப்பின் விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். மாறாக, நேபாள-சீன எல்லையில் ஒரு பெரிய பனிப்பாறை சரிந்து விழுந்ததாகவும், அது 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு இணையான பெரிய அளவிலான நில அதிர்வுகளை பூமியில் ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறினர்.

பனிச்சரிவு எவ்வாறு ஏற்படுத்தியது?
அமெரிக்காவின் புவி-இமேஜிங் நிறுவனமான பிளானட் லேப்ஸ் (Planet Labs) தரவுகளை மேற்கோள் காட்டி நேபாளத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, வட-மத்திய நேபாளத்தில் உள்ள இமயமலையின் ஒரு பகுதியான லாங்டாங் ஹிமாலின் (Langtang Himal) வடக்குப் பகுதியில் உள்ள பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்ததைத் தொடர்ந்து, பெரிய அளவிலான பனி மற்றும் சிதைவுப் பொருட்கள் சரிந்து விழுந்துள்ளன. இந்தப் பனித்திரள் நேபாளப் பகுதியில் உள்ள ஆற்றின் மேற்பரப்பில் விழுந்து, ஆற்றை அடைத்துள்ளது.

ஒன்பது மீட்டர் வரை...
மலைப் பகுதி ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கான சர்வதேச மையம் (ICIMOD) நடத்திய ஆரம்பகட்ட பகுப்பாய்வில், பனி மற்றும் பாறைகள் கலந்த பனிச்சரிவின் பெரும் பகுதி, இந்தியாவுக்குள் பாயும் போட்டே கோசி ஆற்றின் துணையாறான லெண்டே கோலா (Lende Khola) ஆற்றுக்குள் சரிந்து விழுந்தது தெரியவந்துள்ளது. இந்த திடீர் வரத்து, வண்டல் மண் மற்றும் பெரிய கற்பாறைகள் கலந்த வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியது. இதனால் 30 நிமிடங்களுக்குள் ஆற்றின் கீழ்பகுதியில் நீர்மட்டம் ஒன்பது மீட்டர் வரை உயர்ந்துள்ளது.

ஆற்றில் விழுந்த பனிக்கட்டி எவ்வளவு பெரியது?
ஆற்றில் விழுந்த பனிக்கட்டியின் அளவு குறித்து நிபுணர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. சிலர் இந்த பனிக்கட்டியின் அகலம் 1.5 கிலோமீட்டர் வரை இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளனர். செயற்கைக்கோள் படங்களின்படி, இந்த பனிக்கட்டி அநேகமாக 1.5 கிலோமீட்டர் அகலமும் 1.4 கிலோமீட்டர் தடிமனும் கொண்டதாக இருந்திருக்கலாம் என்று திபெத்தைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவின் உயரத்தை விட இரு மடங்கு அதிகம் ஆகும். இந்த மதிப்பீட்டின்படி, அந்த பனிக்கட்டியின் மொத்த பரப்பளவு 250 கால்பந்து மைதானங்களுக்குச் சமமாக இருக்கலாம்.

பொதுவான தேவைகள்
தொலைதூரத்தில், உயரமான பகுதிகளில் பனி ஏரிகள் அமைந்திருப்பதால், தொடர்ச்சியாகக் கண்காணிப்பது கடினம். செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பை விரிவுபடுத்துதல், அபாயகரமான ஏரிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் நில அதிர்வு உணர்கருவிகளை (Underground sensors) நிறுவுதல், உள்ளூர் மக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் விரைவாக எச்சரிக்கக்கூடிய முன்னெச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவை இமயமலை நாடுகள் அனைத்துக்கும் பொதுவான தேவைகள்.

புரிந்து கொள்வதே முக்கியம்
மலைச்சரிவுகள், பனிப்பாறை அசைவுகள், நிலநடுக்கம் ஆகியவற்றின் ஊடே தொடர்ந்து நிகழும் செயல்முறைகளால், இமயமலைப் பகுதி புவியியல் ரீதியாகவே செயல்துடிப்பு மிக்க ஒரு மலைத்தொடர். மனிதர்களுக்கு பாதிப்பு நேரிடுவதை தவிர்க்க, இந்த நிலப்பரப்பின் இயல்பான தன்மையாகப் புரிந்துகொள்வதே முக்கியம். இந்தியா உள்ளிட்ட நாடுகள் இதை உணர்ந்து செயல்பட்டிருக்கின்றனவா? என்பதே கேள்வி.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved