Also Watch
Read this
திமுக கட்டமைப்பில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமைக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர்களின் அதிகாரமும் சரசரவென குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. பலமிழக்கும் முன்னாள் அமைச்சர்கள் யார்? அவர்களிடம் இருந்து எந்தெந்த தொகுதிகள் கைவிட்டு போகிறது? முன்னாள் அமைச்சர்களின் ஆஸ்தான தொகுதிகளை கைப்பற்றப்போவது யார்?

தேர்தல் தோல்விக்கு பிறகு...
2026 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு, கட்டமைப்பில் மாற்றம் செய்யும் திமுக, தலைமைக்கு மிக நெருக்கமான முக்கிய புள்ளிகளின் அதிகாரத்தில் எல்லாம் கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுகவின் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை எல்லாம் கச்சிதமாக ஏற்பாடு செய்வதில் கில்லாடி என அறியப்படும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் இருந்த கரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பு, மறுசீரமைப்பு பணிகளால் கரூர் மேற்கு, கரூர் கிழக்கு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால், அவரது பலம் குறையும் எனவும், கரூரைவிட்டு அவர் கோவைக்கு மாற்றப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் 10 மாவட்டங்கள்
சென்னையில் திமுகவுக்கு 6 மாவட்ட செயலாளர் இருந்த நிலையில் அதன் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிடம் துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர், வில்லிவாக்கம், கொளத்தூர், அம்பத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இந்நிலையில், திமுகவில் சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளாக துறைமுகம், திரு.வி.க.நகர், வில்லிவாக்கம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கொளத்தூர் யாருக்கு?
சென்னை வடக்கு மாவட்டத்திற்குள் கொளத்தூர், பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் சென்னை வடக்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளர் நியமனம் நடைபெறும். இதன்படி மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த முக்கிய தொகுதியான கொளத்தூர், சேகர்பாபுவிடம் இருந்து கைமாற உள்ளது.

சேகர்பாபு சரியாக பணியாற்றாததும், மேம்போக்காக தொகுதியை கண்காணித்ததும்தான் மு.க.ஸ்டாலின் தோல்விக்கே காரணம் என ஏற்கெனவே தலைமையிடம் பலர் புகார் அளித்திருந்ததால் தான் இப்படி ஒரு முடிவே எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அன்பில்மகேஷ், கீதா ஜீவன்...
தலைமைக்கு மிக நெருக்கமான சேகர் பாபுவிற்கே கரிசனம் பார்க்காமல் கொளத்தூரை குறிவைத்து பவரை காட்டிய திமுக, அவரை விட ஜூனியரான அன்பில் மகேஷ்க்கும் அதிகாரத்தை குறைத்துள்ளது. அன்பில் மகேஷ்க்கு திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கி உள்ளதாம். திமுக கட்டமைப்பில் மாற்றம் செய்வதற்கு முன்பு அன்பில் மகேஷ் வசம் 3 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. தற்போது அது இரண்டாக குறைந்துள்ளது.

அதேபோல், முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனுக்கும் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளதாம். கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் 5 சட்டமன்ற தொகுதிகள் இருந்த நிலையில் தற்போது கடலூர் தெற்கு, கடலூர் கிழக்கு என பிரிக்கப்பட்டுள்ளதால் அவரது அதிகாரமும் குறைகிறது..

சோழிங்கநல்லூர் யாருக்கு?
இதனிடையே திமுகவில் தனி மாவட்டமாக உருவான சோழிங்கநல்லூர், சென்னை தெற்கு மாவட்டம் என பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மாவட்ட செயலாளர் பொறுப்பை கைப்பற்றும் ரேசில் சோழிங்கநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் பெயர் அடிபடுவதாக கூறப்படுகிறது. தற்போது சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved