Also Watch
Read this

நடிகை ஷாலினி பாண்டேவின் பெயர் மற்றும் தோற்றத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி ஏ.ஐ வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது அல்லது மற்றவர்களுக்கு பகிர்வது போன்ற செயல்களில் ஈடுபடாமல், அவற்றை சமூக வலைதளங்களில் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இணைய பாதுகாப்பு, கேள்விக்குறி
சமீப காலமாக ராஷ்மிகா மந்தனா, அலியா பட், மிருணாள் தாக்கூர் போன்ற பல முன்னணி இந்திய பெண் பிரபலங்கள் இத்தகைய டீப்ஃபேக் Deepfake போலி வீடியோக்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஷாலினி பாண்டேவும் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி உள்ளார். இது, இணையப் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

நடிகை ஷாலினி பாண்டேவின் போலி வீடியோ
‘அர்ஜுன் ரெட்டி' திரைப்பட புகழ் நடிகை ஷாலினி பாண்டே, இணையத்தில் தன் உருவத்தைப் பயன்படுத்தி பரப்பப்பட்டு வரும் போலி ஏ.ஐ.ஆபாச வீடியோவுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி குறிப்பாகப் பெண்களைக் குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய இழிவான செயல்கள் மிகவும் வேதனையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களுக்கு வேண்டுகோள்
’தற்போது இணையத்தில் பரவி வரும் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ முற்றிலும் போலியானது. அதில் இருப்பது நான் அல்ல. தனிநபர்களை, குறிப்பாகப் பெண்களைக் குறிவைத்து துன்புறுத்த இந்தத் தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது" என்று ஷாலினி பாண்டே கூறி உள்ளார்.

"இத்தகைய தவறான டிஜிட்டல் முறைகேடுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற தொழில்நுட்பத் தவறு ஒருபோதும் சாதாரணமாகக் கடந்துபோகக் கூடியதாக (Normalised) மாறக்கூடாது. இந்த வீடியோவை யாரும் பகிரவோ, டவுன்லோட் செய்யவோ அல்லது அதற்கு லைக், கமெண்ட் போன்ற எதிர்வினையாற்றவோ வேண்டாம், அதற்குப் பதிலாக அந்த வீடியோவை உடனடியாக அந்தந்த சமூக வலைதளப் பக்கங்களில் 'ரிப்போர்ட்' செய்யுமாறும் ரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved