Also Watch
Read this
சட்டப்பேரவை கூட்டத்தொடரில், இத்தனை நாட்களும் எதிர்க்கட்சியும், ஆளுங்கட்சியும் கீரியும் பாம்பும்போல் கருத்தால் சீறினாலும் அதனை சமநிலையோடு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாக சபாநாயகருக்கு அவை உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர். போதும் திகட்டுகிறது என சபாநாயகரே வெட்கத்தில் கெஞ்சும் அளவுக்கு புகழ்ச்சி மழையில் அமைச்சர்களும், அவை உறுப்பினர்களும் நனைய வைக்க, அன்பு கட்டளைபோட்டு தான் அந்த படலத்திற்கே முற்றுப்புள்ளி வைக்கும் நிலை உருவானது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில்...
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தின் இறுதி நாளில் பேரவை சார்பாக பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கல்லூரியில் ஃபேர்வெல் டே போன்று தங்களை பிரிந்து செல்வது வருத்தமாக உள்ளதாக கூறினார். அதற்கு சபாநாயகர் குலுங்கி குலுங்கி சிரித்தார்.

தான் கல்லூரி படித்த நேரத்தில் சட்டமன்றத்திற்கு வெளியே நின்று, இங்கு நாம் எப்போது செல்வோம் என யோசித்ததாக ஆதவ் கூற, தானும் கல்லூரி படித்தபோது சட்டமன்றத்தை எட்டிப்பார்க்ககூட அனுமதி அளிக்கவில்லை எனவும் ஒருநாள் இங்கு வந்து அமர்வேன் எனக்கூறிவிட்டுதான் சென்றதாகவும் தனது ஃபிளாஷ்பேக்கை கூறி சிலாகித்தார் சபாநாயகர்.
தங்களை எதிர்த்து கேள்வி எழுப்பிய திமுகவையும் மிஸ் பண்ணுவதாக கூறிய ஆதவ், திமுக உறுப்பினரையும் கையை பிடித்து தூக்கி விட்டவர் தான் முதலமைச்சர், தங்களுக்கு யாரும் எதிரி இல்லை, திமுகவினரே சீக்கிரம் கிளம்பி வாருங்கள் மக்களுக்காக சண்டை போடலாம் என்று, நகைச்சுவையாக பேசினார்.

தந்தை ஸ்தானத்தில்...
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆனந்த், திமுகவினர் அவையில் இல்லாததுகூட சுவாரசியமாக இல்லைதான் என தங்கள் உறுப்பினர்களிடம் கூறியதாகவும், சும்மா இருங்கள் அதிமுகவினரும் கோபித்துக் கொண்டு அவையைவிட்டு சென்றுவிட போகிறார்கள் என தங்கள் உறுப்பினர்களை அமைதிப்படுத்தியதாகவும் வாய் நிறைய சிரிப்புடன் பேசினார்.
அமைச்சர் ஆனந்த், பேரவை நாற்காலிக்கு அழகே பளபளவென அதில் அமர்ந்திருக்கும் ஜேசிடி பிரபாகர் தான் எனக்கூறி சபாநாயகரை வெட்கப்பட வைத்ததோடு, தந்தை ஸ்தானத்தில் இருந்து வழி நடத்துவதாகவும் உணர்ச்சிபெருக்கில் ஆழ்த்தினார்.

தளவாய்சுந்தரம், சவுமியா நெகிழ்ச்சி
இதனை தொடர்ந்து பேசிய அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம், மக்கள் மத்தியில் ஹீரோ யாரென்றால் சபாநாயகர் தான் என புகழ்ந்து பேசினார்.

அடுத்து எழுந்த பாமக உறுப்பினர் சௌமியா அன்புமணி, சபாநாயகர் பெல் அடித்தாலே தனக்கு கை கால் உதறிவிடும், அவர் கண்ணை காட்டினாலே விறுவிறுவென பேச வேண்டிய அனைத்தையும் பேசுவேன் எனக்கூறி கலகலவென வாய்விட்டு சிரிக்க, ஒட்டுமொத்த அவையும் சேர்ந்து சிரித்தது. அதோடு, கோபம் வந்தால் சபாநாயகர் ஆங்கிலத்தில் தான் பேசுவார் எனவும் கூறி நன்றி தெரிவித்தார்.

இறைவன் நினைத்தது...
அடுத்தடுத்து ஒவ்வொருவரும் புகழ்ந்து பேசுவதற்காகவே எழ, அய்யோ போதும் போதும் என புகழ்ச்சியை விரும்பாமல் கெஞ்சினார் சபாநாயகர். ஆனாலும் பேசிய சி.வி.சண்முகம், கை உயர்த்தும் போதெல்லாம் வாய்ப்புக் கொடுத்த சபாநாயகரால் தன் தொகுதியில் உள்ள அத்தனை பிரச்சினைகளையும் பேசிவிட்டேன், இனி புதிய பிரச்சினை வந்தால்தான் உண்டு என கூறினார். அப்போதும் அவையில் சிரிப்பு கரைபுரண்டது.

சபாநாயகர் சபையை மட்டும் இனிப்பாக நடத்தவில்லை, பலருக்கு இனிப்பு வழங்கி பசியும் ஆற்றுவார் எனக்கூறிய சிவி சண்முகம், அதிமுகவில் இருக்க வேண்டும் என சபாநாயகர் நினைத்தார், ஆனால் 2026 சட்டமன்ற அவையையே அவர்தான் நடத்த வேண்டும் என இறைவன் நினைத்துவிட்டதாக கூறினார்.

பாராட்டு மழைக்கு மத்தியில்...
அதேபோல், எந்த பக்கமாக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் சபாநாயகர் வாத்தியார் போன்று குச்சி வைத்து அடிப்பதாக புகழ்ந்த அதிமுக உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், முன்னாள் சபாநாயகர் அப்பாவுவிடம் அய்யய்யோ பேசவே முடியாது என கடந்தகாலத்தை நகைச்சுவையாககூற, அதுகுறித்து பேசக்கூடாது என பாராட்டு மழைக்கு மத்தியிலும் கண்டிக்க மறக்கவில்லை.

புகழ்ச்சி படலம்...
ஒரு கட்டத்தில் புகழும், நன்றியும் நீண்டு கொண்டே போனதால் போதும் என அன்பு கட்டளையே போட்டார் சபாநாயகர். அடுத்து, அவை முன்னவர் செங்கோட்டையனின் நன்றியோடு புகழ்ச்சி படலம் நிறைவு பெற்றது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved