Also Watch
Read this
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்துள்ளது. தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்ட மு.க.ஸ்டாலினிடம், வெற்றிக்கு பாடுபடப்போவதாக பிரேமலதா உறுதி அளித்துள்ளார்.

இணைந்து உழைப்போம்
இதுதொடர்பகா, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது;
மற்ற கட்சிகள் தங்களது நிலைப்பாடுகளை எடுப்பதில் எனக்கு எந்த ஒரு கருத்தும் கிடையாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உண்டு. எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறோம். நிச்சயமாக அதற்கு நாங்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து உழைப்போம்.

தேமுதிக முழு ஆதரவு
அண்ணன் ஸ்டாலின் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இடைத்தேர்தலில் பரந்தாமனையும் சுகன்யாவையும் வேட்பாளர்களாக அறிவிக்க உள்ளோம், உங்களது ஆதரவு வேண்டும் என்று கேட்டார். தேமுதிக கண்டிப்பாகத் திமுக உடன் தான் கூட்டணியில் இருக்கும், தேமுதிகவின் ஒத்துழைப்பு நூறு சதவீதம் இருக்கும் என்று அவரிடம் சொன்னேன். அதேபோல், எனது ஒப்புதலோடு தான் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தேமுதிகவின் முழு ஆதரவும் திமுகவிற்கு இருக்கும் என்று தெரிவித்திருந்தேன்.

மக்கள் தீர்ப்பே...
அதேபோல் தான், அவரவர் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்று எல்லோரும் உழைக்கப் போகிறோம். தேர்தல் முடிவு என்பது மக்கள் கையில் தான் உள்ளது, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
இவ்வாறு பிரேமலதா கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved