Also Watch
Read this
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா என முதலமைச்சர் விஜய் புகழாரம் சூட்டி உள்ளார். அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் இப்பிறந்தநாளில், நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுவதாகவும் கூறி உள்ளார்.

அண்ணா பிறந்த நாளில்...
இதுதொடர்பாக முதல்வர் விஜய் கூறி இருப்பதாவது;
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவு கூர்ந்து போற்றுகிறேன்.

சமூக, அரசியல் வரலாற்றில்...
எழுச்சியூட்டும் மேடைப் பேச்சாலும், கூர்மையான எழுத்தாற்றலாலும் மக்கள் மனங்களைக் கவர்ந்து, அவர்களின் பேராதரவோடு ஆட்சிப் பொறுப்பேற்று, தமிழ் மொழி மீது கொண்ட அளவற்ற பற்றால் நம் மாநிலத்திற்கு, “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டி, மாநில சுயாட்சிக்கு வித்திட்டு, சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா.

உறுதி ஏற்போம்...
“கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்," போன்ற அவரது உயரிய முழக்கங்களை நெஞ்சில் ஏந்தி, சமூக நீதியும், சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்கிடவும், தமிழின் பெருமையைக் காத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்.
இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved