Also Watch
Read this
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே கோவில்களில் திரண்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு
பிரசித்தி பெற்ற சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து, அருகம்புல் சாற்றியும், விளக்கேற்றியும், சிதறு தேங்காய் உடைத்தும் வழிபாடு செய்தனர். கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி வைபவமும் நடைபெற்றது.

75 கிலோ எடையிலான 2 பிரமாண்ட கொழுக்கட்டை படையல்
தென் கைலாயம் எனப் போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலில், அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்துசமய அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ், சாமி தரிசனம் செய்தார். மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ எடையிலான பிரம்மாண்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டது.

கற்பக விருட்ச அலங்காரத்தில் அருள்பாலித்த மணக்குள விநாயகர்
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, கற்பக விருட்ச அலங்காரத்தில் காட்சியளித்த மூலவரை, ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். முதல்முறையாக ஒரு நாள் மட்டும் சிறப்பு தரிசனத்துக்கு 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

தங்க கவசத்தில் ஜொலித்த சேலம் கடைவீதி இராஜ கணபதி
சேலம் கடைவீதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ராஜகணபதி கோவில் முழுவதும் பல வண்ண மலர்கள், பழங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தங்க கவசத்தில் அருள்பாலித்த விநாயகரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது.

முந்தி விநாயகருக்கு சந்தனக்காப்பு
கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் சந்தனக்காப்பு அணிவிக்கப்பட்டு, பல வண்ண மலர்கள், மயிலிறகு மாலையுடன் ராஜ அலங்காரத்தில் ஜொலித்த விநாயகப்பெருமானை, ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு
திண்டுக்கல் சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோவிலில், ஒரே கல்லால் ஆன 32 அடி உயர விநாயகர் மற்றும் 108 விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விநாயகர் சிலையை சுற்றிலும் பலவண்ண பூக்கள் செடிகளுடன் அடுக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

ரூ.25 லட்சம் மதிப்பிலான நோட்டுகளால் கருவறை முழுவதும் அலங்காரம்
காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற ஏலேல சிங்க விநாயகர் கோவிலில், 25 லட்சம் மதிப்பிலான புத்தம் புதிய ரூபாய் நோட்டுகளை கொண்டு கருவறை முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

108 சீர் வரிசைகள் வைத்து சிறப்பு அபிஷேக ஆராதனை
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் சக்தி விநாயகர் கோவிலில், ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த மூலவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 10 அடி உயர சிலைக்கு, அன்னாசி பழ மாலை, மக்காச்சோள மாலை அணிவிக்கப்பட்டு, 108 சீர் வரிசைகள் வைத்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved