Also Watch
Read this
சென்னை கீழ்ப்பாக்கம் அருகேயுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகள் திருடப்பட்டு, அவற்றுக்கு பதிலாக போலி நகைகள் மாற்றப்பட்டிருக்கும் சம்பவம் வாடிக்கையாளரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. கோடிக்கணக்கில் மோசடி செய்த வங்கி ஊழியர்கள் பிடிபட்டது எப்படி?

கோடிக்கணக்கில் மோசடி...
பொதுமக்கள் தங்கள் உழைப்பின் மூலம் சேமித்த நகைகளை, பாதுகாப்பான இடமாக கருதி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெறுகின்றனர். வங்கிகள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சில வங்கி அதிகாரிகளே தவறாக பயன்படுத்தி, கோடிக்கணக்கில் மோசடி செய்யும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.

அடகு நகை பாக்கெட் மாயம்
கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், மேலாளராக பொறுப்பேற்ற கணேஷ் சந்திர பண்டாவுக்கு, சில நாட்களிலேயே வாடிக்கையாளர் ஒருவரின் அடகு நகை பாக்கெட் பாதுகாப்பு பெட்டகத்தில் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக வங்கி தூய்மை பணி உதவியாளர் புருஷோத்தமன் என்பவரிடம் விசாரித்தபோது, அந்த நகை பாக்கெட் லாக்கர் பகுதிக்கு அடியில் கிடந்ததாக கூறி அவர் எடுத்துக்கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் சந்தேகமடைந்த கிளை மேலாளர், உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட நகை மதிப்பீட்டாளர் ரமேஷ் குமார் மூலம் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்த அத்தனை அடகு நகைகளையும் மறுஆய்வு செய்தார்.

போலி நகைகள்... அதிர்ச்சி
கடந்த மே மாதம் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில், வங்கியின் பல்வேறு வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 24 தங்க நகை கடன் கணக்குகளில் அசல் தங்க நகைகள் திட்டமிட்டு திருடப்பட்டு, அதற்கு பதிலாக போலியான நகைகள் வைக்கப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த 24 கடன் கணக்குகளிலும் சரிபார்க்கப்பட்டபோது, மொத்தமாக 2 ஆயிரத்து 138 கிராம் அசல் தங்கம் இருக்க வேண்டிய இடத்தில், வெறும் ஆயிரத்து 919 கிராம் தங்கம் மட்டுமே மிச்சமிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 3.15 கோடி ரூபாய்க்கும் மேல் அசல் தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டது உறுதியாகி வங்கி அதிகாரிகளையே உறைந்து போக செய்தது.

கை கோர்த்து கூட்டு சதி...
இந்த துணிகர மோசடியில் தொடர்புடைய நபர்களாக முன்னாள் கிளை மேலாளர் சரவண பாபு, வங்கி அதிகாரியும் சாவி பொறுப்பாளருமான கோபிகா, துரை பாபு மற்றும் சிறப்பு அலுவலக உதவியாளரும், தூய்மை பணியாளருமான புருஷோத்தமன் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பெட்டகத்தின் சாவிகளை பராமரிக்கும் கூட்டு பொறுப்பாளர்களும் அலுவலக உதவியாளரும் கைகோர்த்து இந்த சதியில் ஈடுபட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கைது, விசாரணை
வங்கியின் மேலாளர் கணேஷ் சந்திர பண்டா அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 வங்கி ஊழியர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் அயனாவரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் இதேபோல் அதிகாரிகள் நகை மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியும் அரங்கேறியுள்ளது வாடிக்கையாளர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved