Also Watch
Read this
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரமும், DTCP சான்றிதழும் வாங்கி தருவதாக கூறி, பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு ரெய்டு வேட்டையை தொடங்கி இருக்கிறது. சோதனையின் முடிவில் அன்பில் மகேஷ் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த அதிரடி வேட்டை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

ஒரே நேரத்தில் ரெய்டு
திமுக பவர் சென்டர்களில் முக்கிய புள்ளியான பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் திருச்சி தென்னூர் இல்லம், சென்னை உள்ளிட்ட 4 இடங்கள், அவரது உதவியாளர் வாலாடி கார்த்திக்கின் 2 இடங்கள் என 6 இடங்களில் ஒரே நேரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவுப் படை அதிரடி ரெய்டில் இறங்கி கிடுக்கிப்பிடி போட்டிருக்கிறது.

குண்டர் சட்டத்தில் கைது
’தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வாங்கி தருகிறோம், CMDA, DTCP அனுமதி, School Upgradation எல்லாம் முடித்து தருகிறோம்,’ என ஆசைகாட்டி, நெட்வொர்க் அமைத்து வலை விரித்திருக்கிறது ஒரு கும்பல். தருமபுரியை சேர்ந்த இளங்கோவன், பெருநகர காவல் ஆணையரிடம் கொடுத்த புகார்தான் இதன் ஸ்டார்டிங் பாயிண்ட். இந்த மோசடி புகாரில், பதிவு செய்யப்படாத தமிழ்நாடு தனியார் பள்ளி சங்க தலைவரான அரசகுமார், பொருளாளர் முத்துக்குமார் இருவரையும் ஜூன் மாதமே தூக்கி, குண்டாஸில் லாக் செய்தது போலீஸ்.

அமைச்சரின் குற்றச்சாட்டு
A1 அரசகுமாரின் 20 வங்கி கணக்குகள், A2 முத்துக்குமாரின் 29 வங்கி கணக்குகள் என மொத்தம் 49 பேங்க் அக்கவுண்ட்களை Freez செய்து சீல் வைத்தது மத்திய குற்றப்பிரிவு. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றிய நிதி அமைச்சர் மரிய வில்சன், ’நான் பள்ளி நடத்துகிறேன். என்னுடைய பள்ளியை நடத்துவதற்கு என்னிடம் லஞ்சம் வாங்கினார்கள். எங்கே வாங்கினார்கள்? எவ்வளவு வாங்கினார்கள்? எப்படி வாங்கினார்கள் என்று நான் கூறுவதற்கு தயாராக இருக்கிறேன்,’ எனக் குறிப்பிட்டிருந்தார். பள்ளிக்கல்வித்துறையில் நடந்த லஞ்சப் பின்னணியை அம்பலப்படுத்தும் வகையில் அமைந்த அவரது உரை, இந்த மோசடி விவகாரத்திற்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்தது.

முன்னாள் அமைச்சரின் பெயர்
இதுவரை 250க்கும் மேற்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை, DPI வளாகத்தில் உள்ள ஆபீஸ்களில் ஆவணங்கள் பறிமுதல், 177 தனியார் பள்ளிகளிடம் கோடிக்கணக்கில் சுருட்டப்பட்ட பணம் என விசாரணை புயல் சுழன்றடித்தபோதே, அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு நகரத் தொடங்கியது காவல்துறை. பறிமுதல் செய்யப்பட்ட மடிக்கணினிகள், ஹார்டு டிஸ்க், வாட்ஸ்ஆப் உரையாடல்கள் மற்றும் சாட்சிகளின் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களை அலசி ஆராய்ந்தபோது, அன்றைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷின் பெயர் பிரகாசமாக மிளிர்ந்ததாக கூறப்படுகிறது.

கே.என்.நேருவுக்கு அனுமதி இல்லை
இதை தொடர்ந்து அன்பில் மகேஷ் மீதும் ஊழல் FIR பாய, புதன் கிழமை காலை 8 மணிக்கே ஏ.சி. காயத்ரி, ஏ.சி. செந்தில்குமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு மற்றும் குற்றப்பிரிவு படையினர் கதவை சாத்தி கொண்டு உள்ளே சோதனையை தீவிரப்படுத்தினர். விஷயம் காட்டுத்தீயாக பரவ, திருச்சி தென்னூர் இல்லத்திற்கு பாய்ந்து வந்தார் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. ஆனால், கேட்டை மறித்து நின்ற காவல்துறை, ’அனுமதி இல்லை சார்,’ என நேருவை உள்ளே விடாமல் திருப்பி அனுப்பினர். வெளியே நின்றிருந்த நேரு, மிதமிஞ்சிய கோபத்தில் செய்தியாளர்களிடம் பொரிந்து தள்ளினார்.

சட்டப்படி சந்திப்போம்...
களத்தில் வீரியமாக வேலை செய்யும் எதிர்க்கட்சி தலைவர்களை முதலமைச்சர் விஜய் மிரட்டி பார்ப்பதாக சீறிய நேரு, இதை சும்மா விடமாட்டோம் என்றும், கோர்ட்டில் சட்டப்படி எதிர்கொண்டு நிரபராதி என நிரூபிப்போம் என சவால் விடுத்தார்.
மற்றொருபுறம், அன்பில் மகேஷ் வீட்டின் முன்பு ஏராளமான திமுக தொண்டர்கள் கொந்தளிப்புடன் திரண்டதால், அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. அவரது வீட்டின் நுழைவுவாயிலைப் பிடித்துக் கொண்டு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த தொண்டர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது, வெளியே வந்த அன்பில் மகேஷ், தொண்டர்களை அமைதி காக்கும்படி கையசைத்து கேட்டுக்கொண்டார்.

அடுத்து என்ன?
தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள லேப்டாப், ஃபைல் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களின் அடிப்படையில், அடுத்தக்கட்டமாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்படுவாரா?

அல்லது வழக்கம்போல அரசியல் புயல் அடித்து ஓய்ந்துவிடுமா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. எது எப்படியோ, சென்னை மற்றும் திருச்சியில் மத்திய குற்றப்பிரிவு நடத்திய இந்த ரெய்டு வேட்டை, அடுத்து யாரையெல்லாம் சுழன்றடிக்க போகிறது.? இன்னும் எத்தனை முக்கிய புள்ளிகள் இதில் சிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved