Also Watch
Read this
தனக்கான கல்வி உதவித்தொகையை தமிழ்நாடு அரசு விடுவிக்காததால் தம்மால் படிப்பை தொடர முடியாத சூழலுக்கு ஆளாகியிருப்பதாக மாணவர் பாரதிதாசன் வீடியோ வெளியிட்டு மனக்குமுறலை கொட்டித்தீர்த்த நிலையில், மாணவருக்கு முதலாம் ஆண்டுக்கு 36 லட்சம், இரண்டாமாண்டிற்கு 12 லட்சம் என மொத்தம் 48 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்று சமூகநீதித் துறை தெரிவித்துள்ளது.

அம்பேத்கர் அயலக உயர்கல்வி
தமிழ்நாடு அரசின் சார்பில், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி என்ற பெயரின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள், வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி பயில, உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் தற்போது பயனுற்று வரும் 181 மாணவர்களில் ஒருவர் தான் பாரதிதாசன். மலேசியாவில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு படிப்பு படித்து வரும் இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட வீடியோவில், தனக்கான கல்வி உதவித் தொகை இன்னும் கிடைக்கவில்லை என்று கண்ணீர் மல்க கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

அமைச்சர் விளக்கம்
தவெக தலைமையிலான ஆட்சி அமைந்ததும் பெரும் கரும்புள்ளியாக இப்பிரச்னை மாறிவிட, சட்டப்பேரவையிலும் விவாதங்கள் அனல் பறந்தன. சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசுவும் தக்க விளக்கம் அளித்து அப்போதைக்கு அந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

மீண்டும் வெளியான வீடியோ
இந்த நிலையில், மாணவர் பாரதிதாசன் மீண்டும் வெளியிட்டுள்ள வீடியோவில், தன்னை கல்லூரியில் இருந்து நீக்க போவதாக கூறி பகீர் கிளப்பினார். தனக்கான உதவித்தொகை இன்னும் வரவில்லை என்ற பாரதிதாசன், அக்டோபர் முதல் வாரத்தில், தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சூழலில், தற்போது தன்னால் அங்கும் போக முடியாத சூழல் உள்ளதாக கூறி மனம் நொந்து பேசியுள்ளார்.

அதிர்ச்சி தகவல்
மேலும், அரசு தனது ஒட்டுமொத்த அதிகாரத்தையும் பயன்படுத்தி, தன்னை ஒடுக்க முயற்சிப்பதாகவும், கல்வி உதவித் தொகையை ஆராய்ச்சிக்காக தான் பயன்படுத்தினாயா? என கேள்வி கேட்பதாகவும் ஆதங்கத்தை பதிவு செய்திருக்கிறார்.

செலவுகளுக்கான அனைத்து ஆதாரத்தையும் கொடுத்து விட்டதாகவும், அரசின் கேள்விகளால் தன் மீது பேராசிரியர்கள் வைத்த நம்பிக்கையும் உடைந்து போய் விட்டதாகவும் வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார். இதில் ஒருபடி மேலே போய் ரோஹித் வெமுலாவுக்கு நடந்தது போலவே தமக்கும் நடப்பதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அரசியல் தலைவர்கள்...
மாணவர் பாரதிதாசனின் வீடியோவை பகிர்ந்த முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ’மாணவர் பாரதிதாசனுக்கு தேவைப்படும் நிதியை வழங்க முடியாது என்றால், அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிட வேண்டும் என்றும் திமுகவும், தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தை கட்டி படிக்க வைக்கிறோம்,’ என்றும் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் பாரதிதாசனுக்கு ஆதரவாக குரல் எழுப்பி உள்ளனர்.

தவறாக பயன்படுத்தவில்லை
இதனிடையே, ஆராய்ச்சி செலவுகளுக்கான பில் அனைத்தையும் ஆகஸ்ட் 26ஆம் தேதியே அனுப்பிவிட்டதாக, மாணவர் பாரதிதாசன் மீண்டும் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

பில் அனுப்பவில்லை என மீண்டும் மீண்டும் கட்டுக்கதை கட்டி தமது கனவை சிதைப்பதாக சமூக நீதித்துறை மீது குற்றம்சாட்டியுள்ள மாணவர், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved