Also Watch
Read this
சென்னை, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டும் தவெக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் சண்முகம் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதிய தலைமைச்செயலகம்
பட்டினம்பாக்கத்தில் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்தார். இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில், இன்று செப்டம்பர் 19ஆம் தேதி, ’புதிய தலைமை செயலகம் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும். மீனவர்களின் வீடுகள் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்,’ என்று வலியுறுத்தி சிபிஎம் கட்சியினர், மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயலலிதா, கருணாநிதி காலத்தில்...
இதுதொடர்பாக, சண்முகம் கூறியதாவது;
தற்போதைய தலைமைச் செயலகம் நெருக்கடியில் இருக்கிறது என்பதில், யாருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. ஏற்கெனவே ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்திலும் அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கலைஞர் முதலமைச்சராக இருந்த போதுதான் சென்னை அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்றம் கட்டப்பட்டது. ஆனால், அது மருத்துவமனையாக மாற்றப்பட்டு இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரசின் கவனத்திற்கு...
தற்போது, தமிழ்நாடு அரசு தேர்வு செய்யப்பட்டிருக்கிற இடம் அதற்கு கொஞ்சமும் பொருத்தமற்றது என்பதை அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். ஏற்கனவே இந்த பகுதி 2004ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதி என்பது இன்றைய முதலமைச்சருக்கு தெரியுமா தெரியாதா? ஆனால் அதிகாரிகளுக்கு தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

மோசமான முடிவு
சுனாமியால் பாதிக்கப்படுகிற ஒரு பகுதியில், புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டுவது என்று எடுத்துள்ள முடிவு மிக மோசமானது, எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை நான் அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். ஒருவேளை இனிமேல் சுனாமி வந்தால் தடுப்பதற்கான புதிய தொழில்நுட்பம் ஏதாவது இவர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்களா? அல்லது சுனாமி இனிமேல் வராது என்ற முடிவுக்கு தமிழ்நாடு அரசு வந்துவிட்டதா?

யாராக இருந்தாலும்...
கடற்கரைக்கு அருகில் மீனவர்களுடைய வாழ்வாதாரத்தையும் குடியிருப்பையும் பாதிக்கப்படக்கூடிய வகையில் இப்படி யோசனையை சொன்ன அதிகாரிகள் யாராக இருந்தாலும், ஏற்கத்தக்கது அல்ல. “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு,” என்று சொல்வார்கள். யார் இந்த யோசனையை கூறி இருந்தாலும், இது நிராகரிக்கப்பட வேண்டிய ஆலோசனை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

முதல்வருக்கு வலியுறுத்தல்
சென்னை நகரிலேயே, புதிய தலைமை செயலகத்தையும் புதிய சட்டப் பேரவையையும் நிச்சயமாக அமைப்பதற்கான பல்வேறு இடங்கள் இருக்கிறது. மாற்று யோசனைகளை ஆராய்வதற்கு பதிலாக, ’தான் பிடித்த முயலுக்கு மூணு கால்’ என்கிற பெயரில் அவசர அவசரமாக அரசாணையை வெளியிட்டிருப்பது என்பது, யார் என்ன யோசனையை சொன்னாலும் நாங்கள் கேட்க மாட்டோம், எவ்வளவு நியாயமான ஆலோசனையாக இருந்தாலும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்கிற அணுகுமுறையை தான் அது வெளிப்படுத்துகிறது. அரசாணை திரும்ப பெற வேண்டும். பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைக்கப்படாது என்கிற அறிவிப்பை முதலமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும்.

அனைத்துக்கட்சிக் கூட்டம்
இதுபோன்ற விஷயங்கள் என்பது ஏதோ அவர்களுடைய ஆட்சியினுடைய சாதனை பட்டியலில் வரக்கூடியது அல்ல. மாறாக காலம் காலத்திற்கும் அடுத்தடுத்து வரக்கூடிய எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் தலைமை செயலகமும் சட்டமன்றமும் இங்கேதான் இருக்கும் என ஒரு பொதுவான இடத்தில், பொருத்தமான இடத்தில் அமைக்கப்பட வேண்டும்.
அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும், யார் வந்து இங்கு பணியை தொடங்கினாலும் நிச்சயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தடுக்கும்.
இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved