Also Watch
Read this
By: Fyrose Banu

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கிவிட்டு, 20 சவரன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போச்சம்பள்ளி அடுத்த வடமலம்பட்டி அருகே உள்ள கெங்கிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவன் (வயது 45). இவர் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுதா (40) வீட்டில் டெய்லரிங் வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் மற்றும் மகள் ஆகியோர் கல்லூரியில் படித்து வரும் நிலையில், கணவன்-மனைவி இருவரும் மட்டும் இந்த வீட்டில் வசித்து வந்தனர்.

கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயாரைப் பார்ப்பதற்காக சுதா கடந்த வெள்ளிக்கிழமை கோவைக்குச் சென்றுள்ளார். இதனால் வீட்டில் சிவன் மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் திருப்பத்தூர் அருகே ஒரு வேலைக்காகச் சென்ற சிவன், இரவு அங்கேயே தங்கிவிட்டார். கணவன், மனைவி இருவரும் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

முன்னதாக, மாட்டிக் கொள்ளாமல் இருக்க வீட்டைச் சுற்றிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை மர்ம நபர்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். பின்னர், வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றைத் திருடிக்கொண்டு தப்பியோடினர்.

சுதாவின் தாயார் மருத்துவச் செலவுக்காக மகளிர் சுயஉதவிக் குழு மூலம் கடனாகப் பெற்ற பணம் மற்றும் அவர்கள் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved