Also Watch
Read this
கோவையில் கடைக்கு சென்ற 14 வயது சிறுமியை கடத்திச் சென்று கத்தியை காட்டி மிரட்டி, இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மீண்டும் தமிழகத்தை உலுக்கியுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு குற்றவாளிகளை போலீசார் அழைத்துச் சென்றபோது குற்றவாளி ஒருவன், காவல் ஆய்வாளரை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோட முயற்சித்த நிலையில், உதவி காவல் ஆய்வாளர் அந்த குற்றவாளியை காலில் சுட்டுப் பிடித்தார்.

நடந்து சென்ற சிறுமிக்கு...
கோவை மாவட்டம், கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் சந்தோஷ் மற்றும் நண்பர் தவசி. இருவரும் சனிக்கிழமையன்று மதுபோதையில் இருந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள கடைக்கு வந்த 14 வயது சிறுமியை இருவரும் பைக்கில் கடத்தி தவசியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போது மதுபோதையில் என்ன செய்கிறோம் என்பதை அறியாத அந்த நபர்கள், ஒன்றும் தெரியாத அந்த அப்பாவி சிறுமியை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

போலீசில் புகார்
பின்னர், இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது, அப்படி சொன்னால் உன்னை கொன்றுவிடுவேன் என மிரட்டியும் உள்ளனர். இருவரின் மிரட்டலுக்கு பயந்த அந்த சிறுமி, தனது வீட்டிற்கு சென்ற அமைதியாக இருந்துள்ளார். மகளின் நடவடிக்கையை பார்த்து சந்தேகமடைந்த தந்தை, உடம்புக்கு என்ன ஆச்சு? ஏன் சோர்வாய் இருக்கிறாய்? என கேட்க, அதுக்கு மகள் ஒன்றும் இல்லை என மழுப்பியுள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் நடந்த அனைத்தையும் தனது தந்தையிடம் சிறுமி கூற, ஆத்திரமடைந்த தந்தை, சந்தோஷ் மற்றும் தவசி குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சுற்றி வளைத்த போலீசார்
இதனையடுத்து போலீசார் கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதிக்கு சென்று வீட்டில் பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது இருவரும் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்ட நிலையில், கத்தி எங்கு மறைத்து வைத்துள்ளீர்கள்? என போலீசார் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காலில் சுட்டு...
அதற்கு தவசி வீட்டின் அருகே எனக்கூற, போலீசார் கத்தி மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது திடீரென அங்கிருந்து தப்பியோடிய தவசி புதருக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவல் நிலைய ஆய்வாளர் சுவர்ணவள்ளியை வெட்டியுள்ளார்.

இதனை கண்ட மற்ற போலீசார் கத்தியை கீழே போடும் படி எச்சரித்துள்ளனர். ஆனால் தவசி, அவர்களையும் மிரட்ட உதவி காவல் ஆய்வாளர் சிலம்பரசன் அவரது காலில் சுட்டு பிடித்துள்ளார். காயமடைந்த குற்றவாளி தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved