Also Watch
Read this
தென்காசி அருகே கடும் எதிர்ப்பையும் மீறி, தனது மகளை காதல் திருமணம் செய்த இளைஞரை பெண்ணின் தந்தை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தந்தையின் வெறிச்செயலை தடுக்க வந்த மகளுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ள நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தென்காசியில் இருந்து நெல்லையில்...
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்தவர் 23 வயது இளைஞர் ஆகாஷ். இவரும் நெல்லை மாவட்டம் மேலஅரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுஷ்மிதா என்ற 21 வயது இளம்பெண்ணும் கல்லூரியில் படித்தபோது காதலித்து உள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் பெண் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆனாலும், பேசுவதையோ, சந்திப்பதையே நிறுத்தாத காதல் ஜோடி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பாவூர்சத்திரம் அருகே சிவகாமிபுரம் கிராமத்தில் உள்ள வாடகை வீட்டில் வாழ்க்கையை தொடங்கி உள்ளனர். இதனிடையே, சுஷ்மிதாவின் தந்தை முருகனை உறவினர்கள் சிலர் கேலி செய்துள்ளதாக தெரிகிறது.

வீடு புகுந்து...
மகள் ஓடிப்போனதால் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளான முருகன், இரவு 9.15 மணியளவில் பைக்கில் அரிவாளுடன் சிவகாமிபுரத்திற்கு சென்று, வீடு புகுந்து மருமகன் ஆகாஷின் தலை, கை, கால்களில் ஆவேசமாக வெட்டி உள்ளார். நெல்லிக்காய் பறிக்க சென்றுவிட்டு வந்து சிலநிமிடங்களே ஆனதால் சோர்வாக நின்று கொண்டிருந்த ஆகாஷால் அங்கிருந்து தப்பி ஓடக் கூட முடியவில்லை. அதனால், நிலைகுலைந்து அங்கேயே சுருண்டு விழுந்தார். தனது தந்தையிடம் இருந்து அரிவாளை பறிக்க முயன்ற மகள் சுஷ்மிதாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

தப்பி ஓடிய தந்தை கைது
இதனிடையே, அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவர, தான் வந்த பைக்கிலேயே அங்கிருந்து தப்பி ஓடினார் முருகன். இதையடுத்து, அதிக ரத்தம் வெளியேறி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆகாஷை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மக்கள் பாவூர்ச்சத்திரம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

ஆனால், தென்காசி மருத்துவமனையிலேயே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆகாஷின் உடல்நிலை மிக மோசமானதால் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதேபோல், அவருடன் சேர்த்து சுஷ்மிதாவும் அங்கேயே அனுப்பி வைக்கப்பட்டார். இதனிடையே, தப்பி ஓடிய முருகனை தீவிரமாக தேடி வந்த நிலையில் முக்கூடல் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved