Also Watch
Read this

மதுரை மாவட்டம், அழகர்கோயிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் ஆடிப் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிறப்பு அபிஷேகம்
கொடியேற்றத்தையொட்டி, கள்ளழகர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தபிறகு, தங்க கொடிமரத்திற்கு பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது.

10 நாட்கள் நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தில் ஆடிப் பௌர்ணமி தினமான 29ஆம் தேதி காலையில் திருத் தேரோட்டமும், மாலையில் கருப்பண்ணசாமிக்கு கற்பூரஜோதி படிபூஜையும் நடைபெற உள்ளன.

31ஆம் தேதி உற்சவ சாந்தி நிகழ்ச்சியுடன் நிறைவடையவுள்ள பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகம் செய்துள்ளன.

தினந்தோறும்...
கொடியேற்றத்தை தொடர்ந்து, தினமும் காலை கள்ளழகர் தங்க பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை வேளைகளில் அன்னம், சிம்மம், அனுமார், கருடன், சேஷ வாகனம், தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

பிரசித்தி பெற்றது
அழகர்கோயிலில் உள்ள சுந்தரராஜ பெருமாள் என்று அழைக்கக் கூடிய ஶ்ரீகள்ளழகர் கோயிலில், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் சித்திரை திருவிழாவும், தொடர்ந்து ஆடிப் பிரம்மோற்சவ உற்சவ விழாவையொட்டி பௌர்ணமியன்று நடைபெறும் திருத்தேரோட்ட விழாவும் உலக பிரசித்தி பெற்றது. இதில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபடுகின்றனர்.