Also Watch
Read this
By: Fyrose Banu

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆலமரத்து காளியம்மன், ஸ்ரீ ராஜகாளியம்மன் கோயிலில் 82 ஆம் ஆண்டு ஆடி வெள்ளித் திருவிழாவை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள், அலகு குத்தி பூக்குழி இறங்கினர். இக்கோயிலில் ஆடிவெள்ளித் திருவிழா, கடந்த ஆடி முதல் வெள்ளிக்கிழமையன்று காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பல்வேறு தரப்பினர் சார்பில் பால்குடம், பூத்தட்டு அன்னதான விழாக்கள் நடத்தப்பட்டன. கடைசி வெள்ளிக்கிழமையான இன்று காலை 8 மணிக்கு, ராமர் மடம் மற்றும் ஆதி திருத்தளிநாதர் கோயிலிலிருந்து ஒன்றரை வயது குழந்தை முதல் 80 வயது முதியவர் வரை ஆண்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள் எடுத்தும், அலகு குத்தியும், அக்கினிச் சட்டி ஏந்தியும், யோக பைரவர் ஆலயம், தேரோடும் வீதி, பெரியகடை வீதி, செட்டியதெரு , காளியம்மன் கோயில் தெரு வழியாக கோயிலை வந்தடைந்தனர்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள அக்கினி குண்டத்தில் ஓம் சக்தி, பராசக்தி என்ற முழக்கங்கள் எழுப்பியடி பால்குடம் சுமந்தபடியும், தீச்சட்டி, அலகு குத்தியபடியும் பூக்குழி இறங்கினர். திருப்பத்தூர் மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலால் பாலாபிஷேகம் நடைபெற்றது. சுமார் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்ட சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved