Also Watch
Read this
By: Fyrose Banu

சேலம் மாநகரின் முக்கிய பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகத் தொடர் திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், நள்ளிரவில் அரை நிர்வாணத்துடன் 'மங்கி குல்லா' அணிந்து வரும் கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகரில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களைக் குறிவைத்து கடந்த சில நாட்களாகத் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பூட்டப்பட்ட வீடுகளின் பூட்டை உடைத்துத் திருடுவது மற்றும் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களைக் களவாடுவது எனத் திருடர்களின் கைவரிசை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சூரமங்கலம், ஜங்ஷன், மூன்று ரோடு, ஐந்து ரோடு, நான்கு ரோடு, அஸ்தம்பட்டி, அழகாபுரம், கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, செவ்வாய்பேட்டை மற்றும் அரிசி பாளையம் போன்ற நகரின் பிரதான இடங்களில் இந்தக் கொள்ளைக் கும்பல் அட்டகாசம் செய்து வருகிறது. தொழிலதிபர்கள், வியாபாரிகள் மற்றும் விஐபிகள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதிகளில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அரை நிர்வாணத்துடன், முகத்தை மறைக்க 'மங்கி குல்லா' அணிந்தபடி கொள்ளையர்கள் உலா வருகின்றனர்.
இச்சம்பவங்கள் குறித்துக் காவல் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான கொள்ளையர்களின் அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சிகளைப் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், வியாபாரிகளும் பொதுமக்களும் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பாக, மாநகர காவல் துறை உடனடியாக இரவு நேர ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தி, இந்த 'மங்கி குல்லா' கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் எனச் சேலம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved