Also Watch
Read this
கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் கடற்கரை கிராமத்தில் நடை பயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார்.

கன்னியாகுமரியில் முதல்வர் ஸ்டாலின்
கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, திருநெல்வேலியில் இருந்து கார் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி வந்தார். அங்கு தனியார் விடுதியில் தங்கியவர், இன்று காலை 7 மணியளவில் கன்னியாகுமரி - கோவளம் ஊராட்சி கடற்கரை சாலையில் நடை பயிற்சி மேற்கொண்டு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவளம் மீனவ கிராமத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என்று அனைத்து தரப்பு மக்களையும் நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

கை குலுக்கி வாழ்த்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்திருப்பதை அறிந்த பொதுமக்கள், பெண்கள் வீடுகளில் இருந்து வெளியே ஆர்வத்துடன் ஓடி வந்து, முதலமைச்சருக்கு கை கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், தங்களது கோரிக்கைகளையும் கூறினர். பெரும்பாலான மீனவ மக்கள் கோவளத்தில் தூண்டில் வளைவு அமைந்துள்ளது, ஆனால் சிறிய அளவில் இருப்பதால் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கிறது. எனவே, தூண்டில் வளைவை நீட்டித்து தர வேண்டும். கோவளம் ஊராட்சியை கன்னியாகுமரி நகராட்சியுடன் இணைக்க கூடாது. இலவச வீடு கட்டி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, முதல்வரிடம் முன் வைத்தனர்.

முதல்வர் உறுதி
மக்கள் தெரிவித்த கோரிக்கைகளை கேட்டுக் கண்ட முதலமைச்சர் கூறியதாவது;
திமுக அரசு மீனவர்கள் மீது அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. மீனவர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொடுத்து உள்ளது. மீனவர்களுக்கு தொடர்ந்து பணியாற்ற திமுகவுக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள். கன்னியாகுமரி தொகுதியில் எங்கள் கட்சி சார்பில் மகேஷ் போட்டியிடுகிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை தாருங்கள். மீனவர்கள் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு முதல்வர் உறுதி அளித்தார்.

மீனவர்களிடம் வாக்கு சேகரிப்பு
கன்னியாகுமரியில் உள்ள சூரிய அஸ்தமன பகுதியில் இருந்து கோவளம் தூண்டில் வளைவு வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம், முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி சென்றார். தூண்டில் வளைவு பகுதியில் மீனவர்கள் கடலில் பிடித்து வந்த மீன்களை வலையிலிருந்து பிரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, ஒரு படகில் கடலுக்கு செல்ல மீனவர்கள் தயாராக இருந்தனர். அவர்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து வாக்கு சேகரித்தார். இந்த நடை பயிற்சி வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் மகேஷ் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved