Also Watch
Read this
சென்னை அம்பத்தூரில் இளம் பெண் ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி, அவரிடமிருந்து 3 லட்சம் ரூபாய் மற்றும் 9 சவரன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்ட இளைஞர், பெண்ணின் குடும்பத்தினரையும் மிரட்டிய ஆடியோ வெளியாகி உள்ளது.

எம்எல்ஏ பேரன் என்று கூறி...
சென்னை அம்பத்தூரை அடுத்த சண்முகபுரத்தை சேர்ந்தவர் பிரியங்கா. கள்ளிகுப்பம் பகுதியில் உள்ள கடையில் பணிபுரிந்து வந்த இவருக்கு பக்கத்து டீக்கடைக்கு அடிக்கடி வந்து சென்ற கள்ளிகுப்பத்தை சேர்ந்த சந்தோஷ் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தவெக எம்எல்ஏ கொளத்தூர் பாபுவின் பேரன் என்று அறிமுகப்படுத்தி கொண்ட சந்தோஷ், தனது குடும்பப் பின்னணியை காட்டி பிரியங்காவை நம்ப வைத்து அவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி நெருக்கமாக பழகியுள்ளார்.

நகை, பணம்...
அப்போது பிசினஸில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய பணம் தேவைப்படுவதாக சந்தோஷ், பிரியாங்காவிடம் கேட்டுள்ளார். அதனை நம்பிய பிரியங்கா, குடும்பத்தினருக்குத் தெரியாமல் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த 3 லட்சம் ரூபாய் மற்றும் தான் அணிந்திருந்த தங்க சங்கலி, மோதிரம் மற்றும் வீட்டிலிருந்த நகை என மொத்தம் 9 சவரன் தங்க நகைகளை கொடுத்துள்ளார்.

பணம், நகையை கேட்ட போது...
வீட்டின் பீரோவில் இருந்த நகையை எடுக்கச்சென்ற பிரியங்காவின் அம்மா, நகைகள் காணாமல் போனதைக் கண்டு பதறி போய் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கக் கிளம்பினார். வேறு வழியின்றி அவரைத் தடுத்து நிறுத்திய பிரியங்கா,ரகசிய காதல் விவகாரத்தை வீட்டில் போட்டு உடைத்தார். சந்தோஷை அழைத்து நகை மற்றும் பணத்தை திருப்பித் தருமாறு பிரியங்காவின் குடும்பத்தினர் கேட்டபோது, "இதோ தந்துவிடுகிறேன், அதோ தந்து விடுகிறேன்," என்ற சந்தோஷ் அவகாசம் கேட்டு அலைக்கழித்தாக கூறப்படுகிறது.

காவல்நிலையத்தில் புகார்
ஒரு கட்டத்தில், பொறுமையிழந்த பிரியங்காவின் குடும்பத்தினர், இனி பேச்சுவார்த்தை சரிப்பட்டு வராது, போலீசில் புகார் அளிக்கப் போகிறோம் என்று கறாராகக் கூறிய போதுதான், சந்தோஷின் உண்மையான முகமும், ஏமாற்றுப் புத்தியும் முழுமையாக வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது.

சந்தோஷின் மிரட்டலால் அதிர்ந்து போன பிரியங்காவின் குடும்பம் பணம் மற்றும் நகையை மீட்டு கொடுக்க வேண்டும் என புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

நான் யார் தெரியுமா?
இந்நிலையில் பிரியங்காவின் உறவினரிடம் போனில் பேசிய சந்தோஷ் நான் யார் தெரியுமா? எங்கள் குடும்பம் எவ்வளவு பெரிய குடும்பம் தெரியுமா? தாம் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ் பாபுவின் பேரன் என்றதோடு தன்னுடைய ஜாதி பற்றியும் பெருமை பீற்றினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved